விடுதலை செய்யுங்கள்.. திருச்சி சிறப்பு முகாம் கைதிகள் திடீர் தர்ணா.. நீதிமன்றத்தில் பரபரப்பு
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில், நூற்றக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கைதிகள், பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மத்திய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், திடீரென இந்த சிறப்பு முகாமில் சோதனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அமலாக்கப் பிரிவினரும் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதனையடுத்து, திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் ஸ்ரீதேவி, பாஸ்கர், அன்பு ஆகியோர், சிறப்பு முகாமில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு, அங்கிருந்தவர்களிடம் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் லேப்டாப்புகளை பறிமுதல் செய்தனர்.
காவல் துறையினரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, சிறப்பு முகாமில் இருந்தவர்களில் சிலர், மரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது செல்ஃபோன்களை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். எனினும், இதுவரை அவர்களது செல்போன்கள் திருப்பி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 12 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர், பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜராக, காவல் துறையின் வேனில் இருந்து இறங்கிய அவர்கள், திடீரென அங்கேயே உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். தங்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உடனடியாக திருப்பி வழங்கவேண்டும் என்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை மீட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் அவர்களுக்கு வாய்தா கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து மீண்டும் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர்கள் பேசியபோது, தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் தரப்படவில்லை. தங்களை விடுதலை செய்வதற்காக எங்களிடம் கியூ பிரான்ச் பிரிவைச் சேர்ந்த சிவகுமார், ரவி ஆகியோர் பணம் கேட்கிறார்கள். இதுபோல் ஏற்கெனவே 21 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பணம் கேட்டு வருவதால், இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். புதிய வழக்குகளை போட்டு, தொடர்ந்து தங்களை கைது செய்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
திருச்சி: மொத்த கிராமமே எங்கள் நிலம்! வக்பு வாரியம் சுற்றறிக்கை! மக்கள் போராட்டத்தால் பேச்சுவார்த்தை