இன்று ரயிலில் செல்கிறீர்களா? இதை தெரிஞ்சுக்கோங்க.. திருச்சி மார்க்கமாக செல்லும் 4 ரயில்கள் ரத்து!
திருச்சி: திருச்சி மார்க்கமாகச் செல்லும் 4 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து பராமரிப்பு பணிகள் காரணமாக 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
திருச்சி - கரூர், கரூர் - சேலம், சேலம் - கரூர், கரூர்- திருச்சி இடையேயான முன்பதிவில்லா ரயில் சேவை இன்று ரத்தாகியுள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே மண்டலத்தின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் மின்னணு அதிநவீன இண்டர் லாக்கிங் வசதி கொண்ட முக்கிய ரயில் நிலையமாக திருச்சி ஜங்ஷன் உள்ளது. தொலைதூர ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் முக்கிய ரயில்கள் வந்து செல்லும்போது ரயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக ரயில்களை சீராக இயக்குவதற்கு ஏதுவாக, திருச்சி சந்திப்பில் புதிய வழித்தட எண் 10 மற்றும் புதிய நடைமேடை எண் 8 ஆகியவற்றை இயக்குவதற்கு கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் இண்டர் லாக்கிங் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று 4 ரயில்கள் ரத்தாகியுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலாவதாக ரயில் எண் 06881 திருச்சிராப்பள்ளி - கரூர் ரயில், திருச்சிராப்பள்ளியில் இருந்து காலை 09.45 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இரண்டாவதாக ரயில் எண் 06852 கரூர் - சேலம் ரயில், கரூரில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும், இன்று இது முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மூன்றாவதாக ரயில் எண் 06851 சேலம் - கரூர் ரயில், முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. நான்காவதாக ரயில் எண் 06882 கரூர் - திருச்சிராப்பள்ளி ரயில், கரூரில் இருந்து மாலை 3.55 மணிக்குப் புறப்படும், இதுவும் இன்று முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த ரயில் செல்லும் வழித்தடங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மாற்று ஏற்பாடாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications