ஓபிஎஸ் குடும்பத்தினர் ரகசியங்கள் படிப்படியாக வெளியாகும்.. தினகரன் திடீர் பேச்சால் பரபரப்பு
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் தினகரன்
Recommended Video
திருச்சி: டிடிவி தினகரனின் தொனியே இப்போது மாறி விட்டது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினர் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக இனி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
2 நாளாக அதிமுக, அமமுகவில் மாறி மாறி பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமானது ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதுதான்.
இதற்கு முக்கிய பின்னணியாக டிடிவி தினகரனுடன் ஓ.ராஜா கூட்டு வைத்திருந்தார் என்றே சொல்லப்பட்டது.
புது தெம்பு
மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் மீதுகோபத்தை காட்ட டிடிவி தினகரனுடன் விரைவில் ஓ.ராஜா இணைய போவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, டிடிவி தினகரனின் பேச்சில் ஒரு புது தெம்பு காணப்பட்டது. எப்பவுமே தாய்க்கழகத்தில் இணையும்படி அமமுகவை கூவி கூவி அழைப்பது அதிமுகதான்.
துணை முதல்வர்
ஆனால் இப்போது தினகரன் அதிமுகவை அழைத்துள்ளார். அதாவது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் தவிர மற்றவர்கள் அமமுகவுக்கு வரலாம் என்று சொன்னார். மேலும், ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினர் குறித்த உண்மைகள், இனி ஒவ்வொன்றாக வெளியாகும் என்று கூறி துணை முதல்வருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
ரவீந்திரநாத்
இதன் அர்த்தம் என்ன என்று புரியவில்லை. ஏற்கனவே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரது சம்பந்தி குடும்பத்தினர் மீது தேனி மாவட்ட அதிமுகவிற்குள் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இதில் தினகரன் இப்படி சொல்வது இவர்களைத்தானா என்று தெரியவில்லை.
அதிர்ந்துள்ளனர்
அதே போல, ஓ.ராஜா அமமுகவில் இணைவதாக பேச்சு அடிபடுகிறது. அதனால் டிடிவி தினகரன் இப்படி சொல்லி இருப்பாரோ என்றும் புரியவில்லை. ஆனால் தினகரனின் இந்த பேட்டியால் அதிமுக தரப்பு சற்று அதிர்ந்துதான் போயுள்ளது.