500 பேருனு சொன்னாங்க..விஜயால் முடங்கிய திருச்சி! அண்டை மாவட்டங்களிலிருந்து அள்ளி வரப்பட்ட தொண்டர்கள்
திருச்சி: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தனது முதல் பிரச்சாரத்தைத் திருச்சியில் இன்று துவக்குகிறார். திருச்சி மரக்கடை பகுதியில் 10:30 மணிக்கு விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் நண்பகல் வரையில் பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடத்திற்குச் செல்லவில்லை. மாநாடு போல திருச்சியிலும் தொண்டர்கள் குவிந்த நிலையில், பிரச்சாரத்திற்கு 500 பேருக்கு மேல் அனுமதி இல்லை எனச் சொல்லிவிட்டு அருகில் இருந்த மாவட்டங்களில் நிர்வாகிகள், தொண்டர்களை அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியிலிருந்து தனது முதல் பிரச்சாரப் பயணத்தைத் துவக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து திருச்சியை மையம்கொள்ளத் தொடங்கியது அரசியல் புயல்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து திருச்சி மரக்கடை பகுதிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். மற்ற நேரங்களில் விமான நிலையத்திலிருந்து டிவிஎஸ் டோல்கேட் பகுதிக்குச் செல்ல அதிகபட்சம் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

விஜய் பிரச்சாரம்
ஆனால், விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே வருவதற்கே ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. காலை 10:30 மணிக்கு மரக்கடை பகுதிக்கு விஜய்க்குப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பகுதிக்குச் செல்வதற்கே நான்கு மணி நேரத்திற்கும் மேலானது. விஜய் ரோடு ஷோ செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பேருந்து முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். தொண்டர்கள் நடந்து சென்ற வாகனத்தைப் பின்தொடரும் வகையில் வாகனம் மிக மெதுவாக இயக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
சாலையின் இரு புறங்களிலும் திரண்டு நின்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் விஜயின் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளில் பல்வேறு விதிமீறல்கள் இருந்ததாகப் புகார் சொல்கின்றனர் திருச்சி வாசிகள். நல்வாய்ப்பாக சனிக்கிழமை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் திருச்சி மக்கள் கடும் இன்னலைச் சந்தித்தனர். ஒருவேளை வார நாட்களில் இந்தப் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் மிகவும் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்கின்றனர்.
நடிகர் விஜய்
இந்த நிலையில் விஜய் பிரச்சாரம் நடத்தும் இடத்தில் 500 பேருக்கு மேல் அனுமதி இல்லை, குழந்தைகள், கர்ப்பிணிகள் வரக்கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது, 10.30 மணிக்கு பேச ஆரம்பித்து 11 மணிக்கு முடித்துவிட வேண்டும், 500 பேரை மட்டுமே பிரச்சாரத்திற்கு அழைத்து வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் பெரும்பாலானவற்றை தமிழக வெற்றிக் கழகத்தினர் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்கள் அவதி
குறிப்பாக விஜய்க்கு கூட்டத்தைத் திரட்டிக் காட்ட வேண்டும் என திருச்சியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் தவிர்த்து, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய அண்டை மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் தொண்டர்கள் திரட்டி வரப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பல இடங்களில் தொண்டர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர் திருச்சி வாசிகள்.
பயண திட்டம்
திருச்சி விமான நிலையத்துக்கு காலை சுமார் 9 மணிக்கு வந்த விஜய், அந்தப் பகுதியில் இருந்து வெளியே வருவதற்கே 1 மணி நேரத்துக்கு மேல் ஆனது. தொடர்ந்து ஒன்றரை மணி நேர தாமதத்துக்குப் பிறகு, டிவிஎஸ் டோல்கேட் பகுதிக்கு வந்தார். தொடர்ந்து தலைமைத் தபால் நிலைய சிக்னல், மேலப்புதூர் சுரங்கப்பாதை வழியாக, பாலக்கரை பிரபாத் ரவுண்டானா, பழைய மதுரை சாலை வழியாக மரக்கடை செல்கிறார். அங்கு பிரச்சாரம் முடித்துக்கொண்டு காந்தி மார்க்கெட், தர்பார் சாலை, பழைய பால்பண்ணை வழியாக அரியலூர் செல்கிறார் விஜய்.












Click it and Unblock the Notifications