ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ தம்பியிடம் சிபிஐ விசாரணை!
திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என். ராமஜெயம் கொலை வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டு அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் தம்பியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி தற்போதைய அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்கு சென்றார். அப்போது அவர் மர்மநபர்களால் கடத்தப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையோரத்தில் அவருடைய சடலம் மீட்கப்பட்டது.
இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தில்லை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி போலீஸார்
கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார் பல ஆண்டுகளாகியும் கொலையாளியை நெருங்கவே முடியவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆயினும் வழக்கில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சிறப்பு புலனாய்வு குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது.

40 பேர் கொண்ட போலீஸார்
எஸ் பி ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அது போல் ராமஜெயத்தை கொலை செய்த நாளில் திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் 12 பேரிடம் உண்மைக் கண்டறியும் சோதனையை சிறப்பு புலனாய்வு குழு நடத்தினர்.

4 பேர்
கடந்த 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 4 பேர் வீதம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் இருந்து வந்த மத்திய தடயவியல் துறை நிபுணர்கள் அந்த 12 பேரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர்களும் பதில் அளித்தனர். ஆனாலும் இந்த வழக்கில் எந்த துப்பும் துலங்கவில்லை. இந்த நிலையில்தான் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் எம்எல்ஏ
அதாவது அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரியின் தம்பி ராஜா என்கிற புல்லட் ராஜா, அவருடைய மனைவி கிருஷ்ணவேணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டது போல் 2 பேரை புல்லட் ராஜாவும் அவரது கூட்டாளிகளும் கொன்றனர். ராமஜெயத்தின் கைகள் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டிருந்ததை போல் அந்த இருவரும் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதனால் புல்லட் ராஜா குறித்து விசாரணை நடத்தினோம் என்றனர்.












Click it and Unblock the Notifications