திருச்சிக்கு தித்திக்கும் செய்தி.. இனி ஹால்ட் ரயில் நிலையங்களில் யுடிஎஸ்! டிக்கெட் கியூவிற்கு விடுதலை
திருச்சி: யுடிஎஸ் செயலி மூலம் 57 கிராமப்புற ரயில் நிலையங்களில் காகிதமில்லாத டிக்கெட் எடுக்கும் வசதியை திருச்சி ரெயில்வே கோட்டத்தில் தெற்கு ரெயில்வே ஏற்படுத்தி இருக்கிறது.
ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட்டுகளை பெறுவதற்கு பல மணி நேரம் காத்திருந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருந்திருக்கும். இதன் காரணமாக ரயிலை தவறவிட்டவர்களும் ஏராளம்.
இப்படிப்பட்ட கசப்பான அனுபவங்கள் இனி ஏற்படாமல் இருக்க முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டை பெற தெற்கு ரெயில்வேயில் டிக்கெட் கவுண்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல் எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில் யுடிஎஸ் என்ற ஸ்மார்ட்போன் செயலி கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பதற்காக ஸ்மார்ட் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனாலும் இந்த செயலியை பயன்படுத்தி ரயில் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க முடியும்.
இதை விரிவுப்படுத்த வேண்டும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், தெற்கு ரயில்வேயில் கிராமப்புற ரயில் நிலையங்களில் (ஹால்ட் நிலையம்) யுடிஎஸ் செல்போன் செயலியை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்கும் வசதி செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் 57 கிராமப்புற ரயில் நிலையங்களில் இந்த வசதி புதிதாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஹால்ட் நிலையம் என்பது கிராமப்புறத்தில் உள்ள ரயில் நிலையமாகும். இங்கு ரயில் டிக்கெட்டை பயணிகளுக்கு முகவர்கள் வழங்குவார்கள்.
தற்போது, யுடிஎஸ் செல்போன் செயலி மூலமாக ரயில் டிக்கெட் பெற வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ரயில் நிலையங்களுக்கு உள்ளே நுழைவதற்கு முன்பாக டிக்கெட் பதிவு செய்து, ரயிலில் பயணிக்க முடியும். இந்த புதிய வசதியால் திருச்சி சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அதிகாரிகள் தெரிவிக்கையில், "கிராமபுர ஹால்ட் ரயில் நிலையங்களில் முகவர்கள் மூலமாகவே முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, யுடிஎஸ் செல்போன் செயலி மூலமாக டிக்கெட் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதன்மூலமாக, இந்த நிலையங்கள் அருகே வசிக்கும் ரயில் பயணிகள் பயனடைவார்கள். இந்த செயலி மூலமாக, சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட் ஆகியவற்றை ரயில் நிலையங்களுக்கு உள்ளே நுழைவதற்கு முன்பாகபே எடுக்க வேண்டும்." என்றனர்.












Click it and Unblock the Notifications