"நாட்டிற்கே பேராபத்து.. மத வெறியர்களை வீழ்த்துவது நமது முதல் இலக்கு.." திருமாவளவன் பரபர பேச்சு
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், பாஜகவிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும் என்றும் இதற்காகக் காங்கிரஸுடன் உறுதுணையாக நிற்போம் என்றும் தெரிவித்தார்,
திருச்சியில் இன்று அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பிக்கு மணிவிழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், நாடு இப்போது பேராபத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் இதைத் தடுக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பேராபத்து
திருச்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "இன்றைக்கு நாடு ஒரு பேராபத்தில் சூழ்ந்துள்ளது.. இந்த தேசத்திற்கு மிகப்பெரும் ஆபத்து மத வெறியர்களால் உண்டாகி இருக்கிறது.. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் எந்த எல்லைக்கும் போவார்கள்.. இந்த தேசம் மதம் சார்ந்த தேசமாக இருக்க வேண்டும், இந்த தேசத்திற்கு இந்து ராஷ்ட்ரம் எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பதே அவர்களின் இறுதி இலக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

பாஜகவுக்கு எதிராகத் திரள வேண்டும்
பல இனம், பல கலாச்சாரம் நிறைந்த இந்த தேசத்தில் மதச்சார்பற்ற அரசு தான் இருக்க வேண்டும். இதன் பெயர் தான் மதச்சார்பின்மை.. மக்கள் மதம் சார்ந்தவராக இருக்கலாம்.. ஆனால் எப்போதும் எந்தவொரு அரசும் எந்த ஒரு மதத்தையும் சார்ந்தவர்களாக இருக்கக் கூடாது. மதச்சார்பற்ற நாடாக இருந்தால் தான் எப்போதும் நீதி நிலைநாட்டப்படும்.. பாஜகவை எதிர்க்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு மட்டும் தான் இருக்கிறது என்றில்லை.. அனைவரும் ஒன்றாக இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும். இது தான் நாட்டிற்கு நல்லது.

மத வழி தேசியம்
ஆர்எஸ்எஸ் வலிமை பெற்றால் சனாதனமும் கூடவே வலிமை பெறும். நாட்டில் சமூகநீதி குழி தோண்டி புதைக்கப்படும். பாஜகவை வெறும் சாதாரண அரசியல் கட்சியாக மட்டும் பார்க்கக் கூடாது. ஏனென்றால் பாஜக சராசரி அரசியல் இயக்கமில்லை.. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் இயக்கம் தான் பாஜக. இன்றைக்கு மொழி வழி தேசியம் எல்லா மாநிலங்களிலும் வளர்ந்து வருகிறது. ஆனால், பாஜக வளர்த்தெடுக்க முயல்வது மத வழி தேசியம்..

பாஜக சராசரி அரசியல் கட்சியில்லை
இந்து மக்களின் கடவுள் நம்பிக்கையை அவர்களின் அரசியல் வேட்கைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது பாஜக.. அடுத்து வரும் தேர்தலைக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நடக்கும் ஒரு தேர்தலாக மட்டும் நாம் சுருக்கி பார்க்கக் கூடாது.. இது ஒட்டுமொத்த தேசத்தைக் காப்பதற்கு பாஜகவுக்கு எதிராக நடக்கும் இயக்கமாகவே பார்க்க வேண்டும்.. பாஜக நாடு முழுக்க இந்து உணர்வுகளைத் தூண்டிவிடுகிறது. இந்த இந்து உணர்வுக்குத் தலித்துக்களும் பலியாகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

தேர்தல் யுக்தி
இங்குத் தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றியே ஆக வேண்டும் என முயன்று வருகின்றனர். இங்குள்ள தலித் வாக்குகளைச் சிதறடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் தற்போதைய தேர்தல் யுக்தி.. தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகளை பாஜகவால் எப்போதும் சீண்ட முடியாது.. அரசியலில் தனித்து நிற்பதை விடத் தாக்குப் பிடித்து நிற்பது தான் பெரிது. தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் தனக்கான வாக்கு வாங்கியை நிரூபித்துக் காட்டிதான் கூட்டணியில் இடம் பெற்றார்கள்..

தேர்தல் பாதையைக் கைவிட்டாலும்
காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டவர்கள் வலிமை பெறவே விசிக உருவாக்கப்பட்டது. வஞ்சிக்கப்பட்டவர்கள் வலிமை பெற இந்த இயக்கம் வலிமை பெற வேண்டியது அவசியம்.. சமூக நிதியைக் குழி தோன்றி புதைக்கத் திட்டம் போடுபவர்களை நாம் விரட்டியடிக்க வேண்டும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமை பெற வேண்டும்.. அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கத் தேர்தல் அரசியலைத் தவிர்த்துக் கூட விசிக தொடர்ந்து போராட்டக் களத்தில் நிற்கும்.. கொள்கை பாதையை ஒருபோதும் கைவிட மாட்டோம்.. கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்க்கும் காங்கிரசுக்கு நாம் துணை நிற்க வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications