ஊஹேய்.. 'செம வைப்’.. ஸ்டாலின் வந்த மறுநாளே புது பஸ்.. சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட பெண்கள்!
திருச்சி : நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் கிராம பெண்கள் விடுத்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் லால்குடி அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இன்று அரசு பஸ்ஸில் குத்தாட்டம் போட்டுக் கொண்டாடினர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை வரும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் 4,700 கி.மீ தொலைவுக்கு பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை, 3,800 கி.மீ தொலைவு பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூழையாற்றில் ரூ.23 லட்சம் மதிப்பில் சுமார் 15 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து, புள்ளம்பாடி அருகே வெள்ளனூரில் நந்தியார் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.
காரில் செல்லும் வழியில் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆலங்குடி மகாஜனம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது கிராமப் பெண்கள் பலர் உரிய நேரத்தில் எங்கள் பகுதியில் பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் கடும் சிரமம் அடைவதாகவும், பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களிடம், உடனே அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என உறுதியளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதையடுத்து, பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், காலை 8 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும், காலை 8.30 மணி மற்றும் மாலை 6.05 மணிக்கு ஆலங்குடி மகாஜனம் தொடங்கி லால்குடி என 4 நடைகள் பேருந்து இயக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி இன்று காலை ஆலங்குடி மகாஜனத்தில் இருந்து லால்குடிக்கு நகரப் பேருந்து இயக்கப்பட்டது. முன்னதாக, கிராம பெண்கள் பேருந்துக்கு குங்குமப் பொட்டு வைத்து மாலைகள் அணிவித்து பூஜைகள் செய்து வணங்கினர். பள்ளி சிறுவர்கள் பேருந்தில் வண்ணக் காகிதங்கள் ஒட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர், பேருந்து சேவை தொடங்கியதும், பேருந்தில் ஏறி பயணம் செய்த பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஆரவாரம் செய்து டான்ஸ் ஆடினர். கோரிக்கை விடுத்த மறுநாளே பஸ் இயக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications