அடடே! தமிழக அரசுக்கு பறந்த "ரிப்போர்ட்.." படுவேகமாக திருச்சி மெட்ரோ பணிகள்.. என்ன ரூட் தெரியுமா
திருச்சி: தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட நகரங்களிலும் மெட்ரோ சேவையைக் கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ள நிலையில், திருச்சி மெட்ரோ குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் அதிகரிக்கும் வாகன நெரிசலே முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. வாழ்வாதாரங்களுக்காக மக்கள் நகரங்களை நோக்கி வருவது, வாகன பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்டவை இதன் முக்கிய காரணமாக இருக்கிறது.
முன்பெல்லாம் சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் மட்டுமே இருந்த டிராபிக் பிரச்சினை இப்போது இரண்டாம் கட்ட நகரங்களிலும் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது.

மெட்ரோ: சாலை அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்ய மேம்பாலங்களை அமைப்பதும், சாலைகளை விரிவாக்கம் செய்வதும் பெரியளவில் பலன் தராதது. அவை மேலும் மேலும் டிராபிக் அதிகரிக்கவே காரணமாக இருக்கும். பொது மக்களை முடிந்தவரை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைப்பதே இதற்கான முக்கிய தீர்வு. அதன்படி தமிழ்நாட்டில் பல முக்கிய நகரங்களிலும் பொது போக்குவரத்தை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இப்போது பொதுமக்கள் பலரும் மெட்ரோ ரயிலையே பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். ஏசி பயணம், டிராபிக் பிரச்சினை இருக்காது, பன்சுவாலிட்டி என பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் மெட்ரோவில் பயணிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் இப்போது சென்னையில் மட்டுமே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவை இருக்கிறது. அதை மேலும் 3 வழித்தடங்களில் விரிவுபடுத்தக் கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது.
திருச்சி: அதேபோல சென்னை தவிர மற்ற இரண்டாம் கட்ட நகரங்களிலும் மெட்ரோவை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. மதுரை, கோவை, திருச்சி நகரங்களில் மெட்ரோ கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் மெட்ரோ திட்டத்தை அமைப்பது குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
வெறும் அறிவிப்புடன் நிற்காமல் இதற்கான பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.. அதன்படி திருச்சியில் மெட்ரோ திட்டத்தை அமைப்பது தொடர்பாகச் சாத்தியக்கூறு அறிக்கையைத் திருச்சி காப்ரேஷன் இந்த மாத தொடக்கத்தில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதைத் தமிழக அரசு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து மதிப்பீடு செய்ய உள்ளது.

எந்த ரூட்: அதன் பின்னரே இது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி நகருக்கு சுமார் 68 கி.மீ தூரத்திற்கு மூன்று மெட்ரோ பாதைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமயபுரத்தில் இருந்து வயலூர் முதல் லைன் 18.7 கி.மீ. தூரத்தில் அமைகிறது.
அதேபோல துவாக்குடியில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சாப்பூர் வரை இரண்டாவது பாதை 26 கி.மீ. தூரத்திலும், திருச்சி சந்திப்பில் இருந்து விமான நிலையம் வழியாக பஞ்சாப்பூர் வரை மூன்றாவது பாதை 23.3 கி.மீ. தூரத்திற்கும் திட்டமிட்டுள்ளனர். இது மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டம் என்பதால் தங்கள் பங்கு குறைவாகவே உள்ளதாகத் திருச்சி மாநகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
எப்போது தொடங்கும்: இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "நகரின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மெட்ரோ சேவை முக்கியம் என்பதை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளோம். மேலும் நாங்கள் தேவைப்படும் வழிகளைப் பரிந்துரைத்துள்ளோம். தமிழக அரசு இதை பரீசிலனை செய்து மத்திய அரசுக்கு அனுப்பும். கூடுதல் தகவல் தரவும் தயாராகவே உள்ளோம்.
மத்திய மாநில அரசுகளுக்கு எங்கள் அறிக்கை திருப்திகரமாக இருந்தால், மெட்ரோ பணிகளுக்காகக் குழு ஒன்றை அமைப்பார்கள். அந்த குழு தான் மண் பரிசோதனை, எத்தனை நிலையங்கள் என அனைத்தையும் முடிவு செய்வார்கள். இதில் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டுள்ளன. அனைவருடனும் ஆலோசித்த முடிவுகள் எடுக்கப்படும். இந்தாண்டு மண் சோதனை, ஸ்டேஷன்கள், வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டால், அடுத்தாண்டு முதல் மெட்ரோ கட்டுமான பணிகள் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications