திருச்சி மேயராகும் யோகம் யாருக்கு? திமுகவில் வலுக்கும் போட்டி! கே.என்.நேருவை குழப்பும் நிர்வாகிகள்!
திருச்சி: திருச்சி மாநகர மேயராக திமுக சார்பில் யார் முன்னிறுத்தப்படுவார்கள் என்பது தான் இப்போது அம்மாவட்ட நிர்வாகிகளிடையே விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
முன்னாள் துணை மேயர் அன்பழகன், மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் மதிவாணன், கே.என்.சேகரன், அருண் நேரு, என லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே செல்வதால் இதில் முதல்வரின் சாய்ஸ் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இதனிடையே தங்கள் ஆதரவாளரிகளில் ஒருவரை மேயராக்க வேண்டும் என அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய இருவரும் காய் நகர்த்தி வருகிறார்கள்.

மத்திய மாவட்டம்
தமிழகத்தின் இதயப் பகுதியாக திகழும் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை திமுகவுக்கு பல திருப்புமுனைகளை ஏற்படுத்திக் கொடுத்த நகரம் என்று கூறலாம். இதனால் தான் என்னவோ, கருணாநிதி காலம் தொட்டு இன்று வரை திருச்சி மீது ஸ்பெஷல் கவனம் செலுத்தி வருகிறது திமுக தலைமை. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட திருச்சி மாநகராட்சியில், இந்த முறை மேயர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தீவிர விசுவாசி
கடந்த பல ஆண்டுகளாக பெண்கள் கோட்டாவில் இருந்ததால் முக்கிய நிர்வாகிகள் பலரும் மேயராக முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இந்த முறை ஆண்கள் போட்டியிட முடியும் என்பதால் முன்னாள் துணை மேயரும், அமைச்சர் கே.என்.நேருவின் அதிதீவிர விசுவாசியுமான அன்பழகன் மேயர் ரேஸில் முதலிடம் வகிக்கிறார். அன்பு அன்பு என அன்பழகன் மீது பிரியமும், மரியாதையும் வைத்துள்ள அமைச்சர் நேரு அவருக்காகவே பெண்கள் பிரிவிலிருந்து பொதுப்பிரிவுக்கு திருச்சி மாநகராட்சியை மாற்ற நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அன்பில் ஆதரவாளர்
இதற்கு அடுத்தபடியாக மலைக்கோட்டை பகுதி திமுக செயலாளரும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளருமான மதிவாணன் மேயர் வேட்பாளர் ரேஸில் அன்பழகனுக்கு டஃப் கொடுக்கிறார். சுறுசுறுப்பான களப்பணியால் அன்பில் மகேஷின் குட்புக்கில் இடம்பெற்றிருக்கக் கூடிய இவரை மேயராக்க ஒரு டீம் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதேபோல் வெளிப்படையாக தனது விருப்பத்தை தெரிவிக்க மறுத்தாலும், முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரனுக்கும் மேயர் பதவி மீது ஒரு கண் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் குழப்பம்
இதனிடையே கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சிலர், சமீபநாட்களாக அவரை குழப்பும் வகையில் ஒரு கோரிக்கையை முன் வைத்து வருகிறார்கள். அதாவது உங்கள் மகன் அருணை மேயராக்குங்கள் என நேருவிடம் கோரஸாக கோரிக்கை வைத்து வருகிறார்கள் சிலர். ஆனால் தன்னுடன் நீண்ட காலமாக பயணித்து வரும் அன்பழகனுக்கு ஒரு வாய்ப்பு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் நேரு உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இதற்கு சற்றும் சளைக்காமல் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பும் கடும் டஃப் கொடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications