என் கையை பாரு.. 40 வருசம் ஆச்சு.. அறுத்து எடுத்துருவீங்களா? திடீரென ஆவேசமடைந்த அதிமுக மாஜி அமைச்சர்!
திருச்சி : "அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என யார் சொல்வது? என் கையில் பச்சை குத்தியுள்ளேன்.. கையை அறுத்து எடுத்துவிடுவார்களா?" என ஆவேசமாகப் பேசியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருவதையும், அதிமுக எனும் பெயரையும், கட்சிக் கொடியையும் பயன்படுத்தி வருவதையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

மீண்டும் மோதல் : திருச்சி மாநாட்டிலும் அதிமுக பெயர் மற்றும் கொடியை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தி வருவதால் அதனை தடுத்து நிறுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர எடப்பாடி தரப்பினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
திருச்சி பொன்மலை, ஜி.கார்னர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக முப்பெரும் விழா மாநாடு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

என் கையை அறுத்து எடுத்துருவாங்களா? : அப்போது பேசிய கு.ப.கிருஷ்ணன், "திருச்சியில் முப்பெரும் மாநாடு நிச்சயமாக நடைபெறும். அதிமுகவில் எங்களுக்கு இல்லாத உரிமை எவருக்கும் கிடையாது. யார் என்ன புகார் கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றமோ, இந்திய தேர்தல் ஆணையமோ எந்த தடையும் விதிக்கவில்லை.
அதிமுகவின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி அவரே முடிசூட்டிக் கொண்டார். யார் வாக்களித்து தேர்ந்தெடுத்தது? கடந்த 40 ஆண்டுகளாக அதிமுக கொடியை என் கையில் பச்சை குத்தி இருக்கிறேன். யார் வந்து அழிப்பது? என் கையை அறுத்து எடுத்துவிட முடியுமா? அறுத்து எடுக்க யாராவது வருவாங்களா?" என ஆவேசமாகக் கூறினார்.

இரட்டை இலை ஏன்? : அதிமுக கொடியில் இரட்டை இலை சின்னத்தை சேர்த்திருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கு.ப.கிருஷ்ணன், "கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் 2 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம். அவர்கள் அதிமுக வேட்பாளர்கள் என தேர்தல் ஆணையம் ஏற்றிருக்கிறது. இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் அவர்களுக்கு வாக்களிக்க நாங்கள் இங்கே இருந்து தூது விட்டுக்கொண்டிருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications