திருச்சியில் வீட்டை விட்டு ஓடி.. லாட்ஜில் காதலனை நம்பி தங்கிய இளம்பெண் .. ஆடிப்போக வைத்த கோலம்
திருச்சி: திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் அரியமங்கலத்தைச் சேர்ந்த யாஸ்மின் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அண்மையில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இவர்கள் திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கணவன்-மனைவி என கூறி அறை எடுத்து தங்கி உள்ளனர். அங்கு யாஷ்மின் இருந்த கோலம் ஆடிப்போக வைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் என்பவருடைய மகன் சதாம் உசேனுக்கு 19 வயது ஆகிறது. இவர் அரியமங்கலத்தைச் சேர்ந்த அப்துல் ஆசாத் மகளான 19 வயதாகும் யாஸ்மின் என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள். நேற்று முன்தினம் இரவு திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கணவன்-மனைவி என கூறி அறை எடுத்து தங்கி உள்ளனர்.

இந்நிலையில் ஜூன் 8ம் தேதியான நேற்று மாலை 5 மணியளவில் யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனே சதாம் உசேன் தனது நண்பர் ஷேக் அப்துல்லா (19) என்பவரது உதவியுடன் யாஸ்மினை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், காதலனை நம்பி வந்த யாஸ்மினுக்கு, அவரது காதலன்சதாம் உசேன், அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் சேர்ந்து 'டெபன்டாடல்' என்ற போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்தியதும், இதில் அளவுக்கு அதிகமான போதை மருந்து காரணமாக யாஷ்மின் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் விடுதி அறையில் இருந்து யாஸ்மினுக்கு பயன்படுத்தப்பட்ட போதை மாத்திரை அட்டை மற்றும் ஊசி ஆகியவற்றையும் கைப்பற்றினர். இதில் டெபன்டாடல் தலா 10 மாத்திரை கொண்ட 7 அட்டைகள், ஊசி-1, மாத்திரை கலக்கிய நிலையில் 2 டீ கப், சிகரெட் துண்டு 3, ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக யாஸ்மினின் காதலன் சதாம் உசேன், அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தான் யாஸ்மின் காதலன் மற்றும் அவரது நண்பரால் பலாத்காரம் செய்யப்பட்டாரா? கொலை செய்யும் நோக்கத்தில் அளவுக்கு அதிகமாக போதை மருந்து ஊசியில் செலுத்தப்பட்டதா? அல்லது இறப்பிற்கு வேறு ஏதும் காரணம் உண்டா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தாரக்ள்.
இதனிடையே யாஸ்மினின் தாயார் ஷகிலாபேகம் போதை மாத்திரைகள் விற்கும் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர் என்றும், அவர் மூலமாகவே இந்த மாத்திரைகள் பெறப்பட்டு இருக்கலாம் என்று சில தகவல்கள் விசாரணையில் வெளியயே வந்துள்ளது. எனவே அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முழு விசாரணைக்கு பின்னரே உண்மை என்ன என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் பல மர்ம முடிச்சுக்கள் விரைவில் அவிழும். அப்போது தான் யாஷ்மின் இறப்புக்கான காரணம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications