தூத்துக்குடியில் சசிகலா புஷ்பாவுக்கு நோ சான்ஸ்? பிரபல தொழிலபதிபர் மகனை களமிறக்கும் முடிவில் அதிமுக!
தூத்துக்குடி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விரும்பும் பாஜக, அங்கு முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவை வேட்பாளராக களமிறக்க முடிவு செய்துள்ளதாம்.
ஆனால் அதிமுக தரப்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு தாரைவார்க்க விருப்பமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியே கொடுத்தாலும் பாஜக சார்பில் சசிகலா புஷ்பாவை நிறுத்தக் கூடாது என்பது அதிமுக தரப்பில் போடப்படும் கறார் நிபந்தனையாகும். ஏனெனில் ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே, அவர் தனது கன்னத்தில் அறைந்துவிட்டார் என மாநிலங்களவையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் சசிகலா புஷ்பா.

இதனால் ஜெயலலிதாவின் கடும் கோபத்திற்கு உள்ளாகி அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்டார் சசிகலா புஷ்பா. இப்படி கசப்பான பழைய நிகழ்வுகள் பல இருக்கும் போது, அவற்றை மறந்து சசிகலா புஷ்பாவுக்கு அதிமுகவினர் எப்படி வேலை செய்ய முடியும் என்பது எடப்பாடி தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதமாக இருந்திருக்கிறது.
இதனிடையே தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் போட்டியிடுவது உறுதி. இதனால் அவரை எதிர்த்து தென் மாவட்டத்தின் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனை வேட்பாளராக்கும் யோசனையில் ஈடுபட்டிருக்கிறது அதிமுக தலைமை. பிரபல தொழிலதிபர் மகனை இரட்டை இலை சார்பில் களமிறக்கினால் சசிகலா புஷ்பா ஆட்சேபனை சொல்லாமல் ஆஃப் ஆகிவிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எல்லாம் சரி, அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இன்னும் உள்ளதா என்ற கேள்வி பலருக்கும் எழும். இந்த நிகழ்வு அனைத்தும் ஜெயக்குமாரின் நேற்றைய பேட்டிக்கு முன் நிகழ்ந்தது. ஒரு வேளை வார்த்தைப் போர் முடிவுக்கு வந்து, கூட்டணி தொடர்ந்தால் தூத்துக்குடி தொகுதியை பாஜகவுக்கு அதிமுக விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை என்பது தான் லேட்டஸ்ட் தகவலாகும்.












Click it and Unblock the Notifications