ரத்தினசபாபதி உள்ளிட்ட மூவர் டிடிவி-க்காக களப்பணியாற்றிய வீடியோ இருக்கு..அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஒட்டப்பிடாரம்: நடந்து முடிந்துள்ள தேர்தல்களிலும், நடைபெற உள்ள தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவே அமோக வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் சட்டசபை இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை அதிமுகவின் மோகன் பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
அறந்தாங்கி இரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேற்கண்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தினகரனின் கட்சிக்கு சென்று களப்பணியாற்றிய விவரங்கள் உள்ளன. தினகரனின் கட்சிக்கு அவர்கள் பணியாற்றிய விவரங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை சேகரித்து தான், கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்துள்ளதாக கூறினார்
கட்சி விட்டு கட்சி மாறி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று எம்.எல்.ஏ-க்கள் மீதும் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பெரியளவில் வெற்றி கிடைக்காது என்ற உளவுத்துறை அறிக்கையை அடுத்து அதிமுக தரப்பு இந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது ஆட்சியை தக்கவைக்கவே 3 எம்எல்ஏ.க்களின் பதவியை பறிக்க முதல்வர் அவசரம் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications