ஆதார் + வங்கி கணக்கு.. பி.எம். கிசான் தவணைத் தொகை.. விவசாயிகளுக்கு தபால் துறை அழைப்பு
தூத்துக்குடி: மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள், 15-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் ஆகும். இந்நிலையில் பி.எம். கிசான் திட்ட தவணைத் தொகை பெற தபால் துறை வங்கியில் விவசாயிகள் கணக்கு தொடங்கலாம் என்று தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா அறிவித்துள்ளார்..
இது குறித்து தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள், 15-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள்/ தபால்காரர்/ கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி தமிழ்நாட்டில் 1.61 லட்சம் விவசாயிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 3,528 விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.
தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்.
இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் இந்த முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்சலகங்கள்/ தபால்காரர்/ கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம்" இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications