பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது?
தூத்துக்குடி: சினிமா துணை நடிகை தீபாவின் தந்தை டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சின்னத்திரை மற்றும் திரைப்பட துணை நடிகை தீபா. மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம், மண்டேலா, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். இவரது தந்தை புலவர் கணேசன் (வயது 70). இவர் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பஜாரில் உள்ள டீக்கடை அருகே நின்றிருந்தபோது, முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கினர்.

தீபா தந்தை மீது அரிவாள் வெட்டு
இதில் புலவர் கணேசன் பலத்த காயமடைந்தார். இதைப் பார்த்ததும் அருகில் இருந்த ஒருவர் தடுக்க முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் அவரையும் வெட்டியதில், அவரது கையிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
காயமடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் தொடர்புடைய தூத்துக்குடி சக்தி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த உச்சிமாகாளி மகன் பொன்ராஜ் (25) மற்றும் இசக்கி (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கார்த்தி என்பவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
புலவர் கணேசன் யார்?
புலவர் கணேசன், தூத்துக்குடி மாநகர் 57 வது வார்டு காங்கிரஸ் தலைவராகவும், முத்தையாபுரம் பகுதியில் பத்ரகாளி அம்மன் கோயில் தர்மகர்த்தாகவும் இருந்து வருகிறார். இந்த கோயிலில் சிறந்த நிர்வாகத்தை வழங்கியதற்காக அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றவர்.
புலவர் கணேசன், பத்ரகாளி அம்மன் கோயில் அருகே காமராஜருக்கு சிலை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கோயில் நிர்வாகம் மற்றும் காமராஜர் சிலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தாக கூறப்படுகிறது.
கொலைவெறித் தாக்குதல்
இந்நிலையில் தான் நேற்று முத்தையாபுரம் பஜாரில் உள்ள டீக்கடை முன்பாக புலவர் கணேசன் நின்று கொண்டிருந்த போது, திடீரென்று அங்கு மோட்டார் பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர், கைகளில் அரிவாளுடன் பாய்ந்து வந்து புலவர் கணேசனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
முன்விரோதம் காரணமாக புலவர் முத்தையாவை அவர்கள் அரிவாளால் வெட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் முத்தையாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications