நெருங்கிய தேர்தல்.. திருச்செந்தூர் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்.. அனைத்து சன்னதிக்கும் விசிட்
தூத்துக்குடி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று தரிசனம் செய்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்கள் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தேனி தவிர 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றது. இந்த முறை 40 இடங்களிலும் வெல்லும் முனைப்பில் திமுக கூட்டணி உள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று முதல்வர் ஸ்டாலின் மனைவியும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தாயுமான துர்கா ஸ்டாலின் இன்று தரிசனம் செய்தார். திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த அவர் பேட்டரி காரில் பயணித்து மூலவர், சண்முகர், தட்சிணா மூர்த்தி உள்பட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செ்தார்.
கோவில் தரிசனத்தை முடித்து வெளியே வந்த துர்கா ஸ்டாலின் மக்களை நோக்கி கையசைத்தபடி அங்கிருந்த புறப்பட்டு சென்றார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் துர்கா ஸ்டாலின் இந்த தரிசனத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருச்செந்தூரில் துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அவர் பலமுறை திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
முன்னதாக இந்த கோவிலில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் சாமி தரிசனம் செய்தனர். 2 நாட்களுக்கு முன்பு நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி சத்ரு சம்ஹார யாகம் வளர்த்து சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications