டைகர் கா ஹுக்கும்! ‘ஜெயிலர்’ மொத்த தியேட்டரையும் புக் செய்து ‘மாநாடு’ அழைப்பு விடுத்த அதிமுக மாஜி!
தூத்துக்குடி:'ஜெயிலர்' பட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி, அதிமுக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு. வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க ஜெயிலர் டிக்கெட்களை மொத்தமாக புக் செய்து இலவசமாக ரசிகர்களுக்கு வழங்கிள்ளார் கடம்பூர் ராஜூ.
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அ.தி.மு.கவின் பொன்விழா எழுச்சி மாநாடு மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, தனது செல்வாக்கைக் காட்டும் வகையில் மதுரையில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்காக மதுரை வலையங்குளம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநாட்டு மேடை மற்றும் பந்தல் என பிரமாண்ட முறையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டு அழைப்பிதழை அதிமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி பகுதிகளில் வழங்கி, மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். அந்தவகையில், ஒரு நூதன முயற்சியையும் மேற்கொண்டுள்ளார் கடம்பூர் ராஜூ.
கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் இன்று 'ஜெயிலர்' திரைப்படத்தின் காலை காட்சியை மொத்தமாக முன்பதிவு செய்துவிட்டு, படம் பார்க்க வரும் ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக 'டிக்கெட்' வழங்கி, மதுரை அதிமுக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கடம்பூர் ராஜூ.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 'ஜெயிலர்' பார்க்க வரும் ரசிகர்களை அதிமுக மாநாட்டுக்கு அழைக்கும் விதமாக இலவசமாக 'ஜெயிலர்' டிக்கெட் வழங்கியுள்ளார் கடம்பூர் ராஜூ. அதிமுக சார்பில் இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் செய்தி அறிந்து, ஏராளமானோர் இன்று காலை காட்சி 'ஜெயிலர்' பார்க்க கோவில்பட்டி தியேட்டரில் குவிந்தனர்.
ரஜினிகாந்த், 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவேன் என போக்கு காட்டி வந்த நிலையில், தற்போது அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டுள்ளார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த கடம்பூர் ராஜூ, ரஜினி ரசிகர்களை அதிமுக மாநாட்டுக்கு அழைத்துள்ளது, விவாதமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications