ஆடி அமாவாசை! திருச்செந்தூர் முருகன் கோயில் துலாபாரத்தில் அரிசி காணிக்கை வழங்கிய அன்புமணி- சவுமியா
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி துலாபாரத்தில் அமர்ந்து எடைக்கு எடை அரிசியை பாமக தலைவர் அன்புமணியும் அவருடைய மனைவி சவுமியாவும் வழங்கியுள்ளனர்.
இன்று ஆடி அமாவாசை அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு கோயில்களில் அமாவாசை திருவிழாக்களும் நடந்து வருகின்றன. அது போல் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு பலர் திதி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ராமேஸ்வரம், பேரூர் படித்துறை, ஸ்ரீரங்கம் படித்துறை உள்ளிட்ட இடங்களிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் அவருடைய மனைவி சவுமியா அன்புமணியும் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்திருந்தனர்.
அங்கு அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி ஆற்றில் இருந்து வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் மேட்டூர் அணை மூலமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நீரில் 1.60 லட்சம் கனஅடி நீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. 1.70 லட்சம் கனஅடி என்றால் ஒரு நாளைக்கு 15 டிஎம்சி தண்ணீராகும்.
கர்நாடகா நமக்கு கொடுக்க வேண்டியது 177 டிஎம்சி. ஆனால் கடலில் வீணாக சென்று 17 டிஎம்சி தண்ணீர் கலக்கிறது. சென்னையின் குடிநீர் தேவைக்கு ஓர் ஆண்டுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு 15 டிஎம்சி. சென்னைக்கு ஓராண்டுக்குத் தேவைதான தண்ணீரை ஒரே நாளில் தமிழக அரசு வீணாக்குகிறது.
காவிரி நீர் கடலில் கலப்பதை தடுத்து அந்த நீரை வைத்து பல திட்டங்களை தமிழக முதல்வர் உருவாக்க வேண்டும். காவிரியில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. முதல்வர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசியல் ரீதியாக நடத்த மறுக்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. சமூகநீதி என்று அக்கறை இருந்தால் கண்டிப்பாக அவர் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பார். அருந்ததியினர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு வந்த தீர்ப்பு திராவிட ஆட்சிக்கு கிடைக்க வெற்றி என்கிறார்கள். தமிழக அரசு பொறுப்பேற்ற 23 மாதங்களில் 3 முறை மின் கட்டணத்தை ஏற்றிவிட்டது. 33.7 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் கப்பல் மோதி ஒருவர் இறந்துள்ளார். இது கொலை செய்யும் முயற்சி. இந்திய அரசும் இலங்கை கடற்படை மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசும் மெத்தனமாக இருக்கக் கூடாது. வயநாடு மழை வெள்ளம் மிகப் பெரிய விபத்து. இது போன்ற விபத்துகள் ஏற்படாதவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
திருச்செந்தூருக்கு கார் மூலம் வந்த அன்புமணியும் சவுமியாவும் அங்குள்ள கடலில் கால்களை நனைத்தனர். பிறகு நேராக துலாபாரம் வைக்கும் இடத்திற்கு சென்றனர். அங்கு முதலில் அன்புமணி துலாபாரத்தில் அமர்ந்து எடைக்கு எடை அரிசி மூட்டைகளை செலுத்தினார். அது போல் சவுமியாவும் எடைக்கு எடை அரிசி மூட்டைகளை செலுத்தினார். பிறகு இருவரும் முருகனை தரிசித்தனர்.












Click it and Unblock the Notifications