ஆள் இல்லாத இடத்திற்கு சவாரிக்கு கூப்பிட்ட இளைஞர்கள்! தூத்துக்குடி ஆட்டோ டிரைவருக்கு காத்திருந்த ஷாக்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆட்டோ டிரைவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்ற இளைஞர்கள் 3 பேர் அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். ஆட்டோ டிரைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் காளைமுத்து என்ற காளைப்பாண்டி (வயது 50). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன் தினம் வழக்கம்போல் சவாரிக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் செல்போனில் அழைத்துள்ளனர். ஆனால் அவர் போனையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கண்மாயில் கிடந்த ஆட்டோ டிரைவர்
இதனால் ஆட்டோ டிரைவர் காளைமுத்துவை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் அத்தைகொண்டான் கண்மாய் பகுதியில் காளைமுத்து படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார் காளைமுத்துவை மீட்டு 108 ஆம்புலனஸ் மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரத்தம் படிந்த ஆடைகளுடன் 3 இளைஞர்கள்
காளைமுத்துவுக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருந்ததால், முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தூத்துக்குடி அருகே 3 இளைஞர்கள் ரத்தம் படிந்த ஆடைகளுடன் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அந்த இளைஞர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இளைஞர்கள் 3 பேரும் கூலித்தொழிலாளர்கள் என்பதும், தூத்துக்குடி செல்வநாயகபுரத்தை சேர்ந்த தேவராஜ் (26), நந்தகோபாலபுரத்தை சேர்ந்த கோகுல்ராம் (21) மற்றும் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த ராமலட்சுமணன் (29) என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த 3 இளைஞர்கள் தான் ஆட்டோ டிரைவர் காளைமுத்துவை தாக்கி கண்மாயில் போட்டுவிட்டு வந்ததும் தெரியவந்தது.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில்
சவாரி வர வேண்டும் என்று சொல்லி, அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று விட்டு, சவாரிக்கு பணம் கேட்டதால் கொடுக்க முடியாது என்று சொல்லி தாக்கியதும், இதில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து அவரது ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணையில் தெரியவந்ததாவது:-
சம்பவத்தன்று 3 இளைஞர்களும் ரயிலில் தூத்துக்குடியில் இருந்து விருதுநகருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கையில் மதுபாட்டில்களை வைத்துள்ளனர். மது குடித்துக்கொண்டே ரயிலில் பயணித்துள்ளனர். சைட் டிஷ் இல்லாததால், ரயில் கோவில்பட்டி ரயில் நிலையம் வந்ததும், 3 பேரும் இறங்கி சைட் டிஷ்ஷுக்கு தின்பண்டங்களை வாங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலை தவறவிட்டனர்.
உடைந்த மதுபாட்டில்கள்
சரி இனிமேல் பஸ்சில் போகலாம் என்று நினைத்து வெளியில் நின்ற ஆட்டோ டிரைவர் காளைமுத்துவை கோவில்பட்டி பஸ் நிலையத்தில் கொண்டுவிடுமாறு அழைத்துள்ளனர். அவரும் சவாரிக்கு வந்து இருக்கிறார். அப்போது அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு வண்டியை விடுமாறு கூறியுள்ளனர். எதற்காக என்று கேட்டபோது மது குடிப்பதற்காக என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதன்பேரில் ஆட்டோ டிரைவரும் அத்தைகொண்டான் கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 3 பேரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஆட்டோ டிரைவர் பெட்ரோல் போடுவதற்கு பணம் இல்லை எனவே சவாரிக்கான பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆட்டோ டிரைவரை 3 இளைஞர்களும் சேர்ந்து கற்களாலும், உடைந்த மதுபாட்டில்களாலும் அடித்து தாக்கினர்.
இறந்துவிட்டார் என நினைத்து தப்பி ஓட்டம்
இதில் வலி தாங்க முடியாமல் கத்திய காளைமுத்து அப்படியே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அவர் உயிரிழந்துவிட்டார் என்று பதறிப்போன இளைஞர்கள் அவரது ஆட்டோவையே எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். ஆனால் அந்த ஆட்டோவும் பெட்ரோல் இல்லாமல் பாதி வழியில் நின்றது. இதனால் ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு பஸ்சில் சென்ற போது போலீசிடம் மாட்டியுள்ளனர்.
இதையடுத்து தூத்துக்குடி போலீசார் இதுபற்றி கோவில்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, இளைஞர்கள் 3 பேரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் கோவில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications