"தரையில் அமர வைக்கிறார்கள்.. சாப்பிடும் தட்டில் கூட தீண்டாமை" பாஞ்சாங்குளம் பள்ளியிலும் சாதிய கொடுமை
தென்காசி: பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியிலும் சாதிய தீண்டாமை கொடுமை நடப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு வரும் வழியில் பெட்டிக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தக் கடையில் குழந்தைகள் மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடைக்கு வந்த பள்ளி குழந்தைகளிடம் கடைக்காரர், "இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். பள்ளிக்கூடத்திற்கு செல்லுங்கள். இனி தின்பண்டம் உள்ளுர் கடையில் வாங்கக் கூடாது. தின்பண்டம் கொடுக்க முடியது என்று சொல்கிறார்கள் என வீட்டிலும் சொல்லுங்கள். இனி கொடுக்க மாட்டாங்க. ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு" என்று சொல்கிறார்.

சாதிய தீண்டாமை கொடுமை
இதனை கேட்ட அந்த பிஞ்சு குழந்தை, என்னக் கட்டுப்பாடு என்று கேட்கிறது. அதற்கு கடைக்காரர் உடனே, "கட்டுப்பாடு என்றால் ஊரில் ஒரு கூட்டம் போட்டு பேசி இருக்கிறார்கள். உங்கத் தெருவில் யாருக்கும் பொருள்கள் கொடுக்கக் கூடாது என்று" என்று கூறி அந்தக் குழந்தைகளை கடைக்காரர் திருப்பி அனுப்புகிறார். இதுதொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

2 கைது; 5 பேர் மீது வழக்கு
இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், ராமசந்திரமூர்த்தி மற்றும் மகேஷ்வரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அந்தக் கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து சாதிய தீண்டாமை குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், முருகன், சுதா, குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

தீவிர நடவடிக்கை தேவை
பகுத்தறிவு பகலவனான பெரியாரின் பிறந்தநாளன்று சாதிய கொடுமைகள் நடைபெற்ற சம்பவம் பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்காத நபர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மாணவர்கள் வேதனை
இந்த நிலையில் மாணவர்கள் மீது ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும் சாதிய தீண்டாமை நடைபெற்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் கூறுகையில், பள்ளியில் இருக்கையில் அமர்வது, உணவுக்கு தட்டு வழங்குவதில் தீண்டாமை பார்க்கப்படுவதாகவும், தீண்டாமை கொடுமையை ஆசிரியர்கள் கண்டுகொள்வதில்லை என்று மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பள்ளியிலும் தீண்டாமை
தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று மாணவர்களின் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் பாடம் சொல்லி கொடுக்கும் பள்ளியிலேயே சாதிய தீண்டாமை கொடுமை நிகழ்ந்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications