தேர்தல் ரிசல்ட் வருவதற்குள்.. திமுகவுக்கு தாவிய காங்கிரஸ் நிர்வாகி.. கூட்டணிக்குள் உள்குத்து!
தூத்துக்குடி: திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில், காங்கிரஸ் நிர்வாகி திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவடைந்து, இன்னும் ரிசல்ட் வராத நிலையில் இந்த கட்சி தாவல் கூட்டணிக்குள் விரிசலா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில், கடும் இழுபறிக்கு பின்னரே, திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடும் இழுபறிக்குப் பின்னரே முடிவுக்கு வந்தது. எனினும், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய 28 தொகுதிகளிலும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் சுமார் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2026 தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக எஸ்.பி.சண்முகநாதன் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தராஜுக்கு திமுக தரப்பில் சரிவர ஒத்துழைப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. வேட்பாளர் அமிர்தராஜ் வீட்டில் தேர்தலுக்கு முன்பாக ரூபாய் 62 லட்சம் ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கியது. அவருக்கு நெருக்கமானவர்களே, பணம் இருக்கும் விவரத்தை அதிகாரிகளுக்கு தெரிவித்ததாகவும் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், துாத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான பிச்சுவிளை சுதாகர், திடீரென அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேற்று முன்தினம் சந்தித்து, திமுகவில் இணைந்தார். தேர்தல் முடிவு வரை கூட காத்திருக்காமல், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி ஒருவர், திமுகவில் ஐக்கியமானது, கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
பிச்சுவிளை சுதாகர், காங்கிரஸ் கட்சியில் மாவட்டப் பொறுப்பில் இருந்தாலும், திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராகவே இருந்தார். தொகுதி பொறுப்பாளராக இருந்தாலும், தேர்தலில் சரியாக பணியாற்றவில்லை. அதனால், அவரை வேட்பாளர் அமிர்தராஜ் தரப்பினர் ஒதுக்கி வைத்தனர். இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் காங்கிரஸ் வேட்பாளருக்கு எந்த வேலையும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் தலைமையிடம் அமிர்தராஜ் புகார் அளித்துள்ளார். இதற்கு பதிலடியாக, காங்கிரஸ் நிர்வாகி சுதாகரை, திமுக பக்கம் அனிதா ராதாகிருஷ்ணன் இழுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில காங்கிரஸ் நிர்வாகிகளும் திமுக பக்கம் வருவார்கள் எனக் கூறப்படுகிறது. தேர்தல் ரிசல்ட் வருவதற்குள் கூட்டணிக்குள் நடக்கும் இந்த கட்சி தாவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications