திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்! சூரபத்மனை வதம் செய்தார் ஜெயந்திநாதர்! விண்ணை பிளந்த அரோகரா கோஷம்
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்வு இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. யானை, சிங்க முகங்களுடன் வந்து பிறகு சுயரூபத்தில் வந்த சூரபத்மனை முருகன் வதம் செய்யும் நிகழ்வு இதுவாகும். இந்த நிகழ்வின் போது பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள், அக்டோபர் 22 ஆம் தேதி, அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இதன் சிகர விழா சூரசம்ஹாரம். திருத்தணியை தவிர மீதமுள்ள அறுபடை வீடுகளிலும் இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

அந்த வகையில் இன்று சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்றது. இதற்காக அதிகாலை 1 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் நடந்தது.
மாலை நடைபெற்ற சூரசம்ஹார விழாவுக்காக நாகை மாவட்டம் சிக்கலில் அன்னை பராசக்தியிடம் வாங்கிய வேலுடன், பாரம்பரிய இசை இசைக்க, கந்த சஷ்டி மண்டபத்தில் இருந்து திருச்செந்தூர் கடற்கரைக்கு ஜெயந்திநாதர் சப்பரத்தில் புறப்பட்டார். அவர் மயில் இறகு மாலை, கிராம்பு மாலை அணிந்திருந்தார். இதைத் தொடர்ந்து முருக பெருமான், முதலில் தாரகா சூரனை வதம் செய்தார்.
இரண்டாவதாக பானுகோபன், மூன்றாவதாக சிங்கமுகாசுரன், நான்காவதாக மாமரமாக வந்த சூரபத்மனை முருகர் தனது வேலால் தலையை துண்டித்தபோது ஒரு துண்டை மயிலாகவும் மறு துண்டை வேலாகவும் முருக பெருமான் ஆட்கொண்டார். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்களும் கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களும் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.
சூரசம்ஹார நிகழ்வு ஏன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சூரபத்மன் என்ற அரக்கன், சிவபெருமானின் தீவிர பக்தர், தனது தவ வலிமையால் சிவனிடம் ஒரு வரம் கேட்டான்.
அதாவது "எனக்கு இறப்பே வரக் கூடாது" என்றான். உடனே சிவனோ, பிறப்பு என இருந்தால் இறப்பு என இருக்குமே, சரி நீயே சொல் உன் இறப்பு எப்படியிருக்க வேண்டும்? என வினவினார்.
அப்போது சூரபத்மன், "பெண்ணின் வயிற்றில் இருந்து பிறக்கும் ஒரு மனிதரால் எனக்கு இறப்பே வரக் கூடாது, ஆண் மூலம் பிறக்கும் ஒருவர் மூலம் மட்டுமே என்ககு இறப்பு வர வேண்டும்" என வரம் கேட்டான். அதற்கு சிவனும் அப்படியே ஆகட்டும் என கொடுத்துவிட்டார்.
இதையடுத்து சூரபத்மனின் ஆட்டம் அதிகரித்தது. தனது சகோதரர்கள் சிங்கமுகன், தாராகாசுரன், பானுகோபன் ஆகியோருடன் இணைந்து தேவர்கள், முனிவர்களுக்கு சூரபத்மன் தொல்லை கொடுக்கத் தொடங்கினான்.
நாளுக்கு நாள் அவர்களது தொல்லை அதிகரித்ததால் சிவபெருமானிடம் போய் அனைவரும் முறையிடுகிறார்கள். அப்போது சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகனை படைக்கிறார்.
இதையடுத்து சூரபத்மனை அழிக்க நாகை மாவட்டம் சிக்கலில் உள்ள தாய் பராசக்தியிடம் சக்திவேலை பெற்று சூரனை வதம் செய்த நிகழ்வுதான் இந்த சூரசம்ஹாரம். அதாவது மாமரமாக வரும் சூரனை பராசக்தியின் வேல், இரண்டாக பிளக்கிறது. அதில் ஒரு மரத்துண்டை மயிலாகவும், மறுத் துண்டை சேவலாகவும் முருகன் ஆட்கொள்கிறார். அதாவது எதிரிகளை கூட முருகன் ஆட்கொள்ளும் தெய்வாகமே இருக்கிறார் என்பதுதான் இந்த நிகழ்வு.












Click it and Unblock the Notifications