ஆபரேஷன் தென் மாவட்டம்.. ஒருமுறை கூட திமுக வெல்லாத தொகுதி.. கோவில்பட்டியில் கவனம் செலுத்தும் கனிமொழி!
தூத்துக்குடி: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் கோவில்பட்டி தொகுதியை இதுவரை திமுக ஒருமுறை கூட நேரடியாக போட்டியிட்டு வென்றதே இல்லை. ஆனால் இம்முறை கனிமொழியின் கவனம் கோவில்பட்டி தொகுதியில் தீவிரமாக இருந்து வருகிறது. ஏற்கனவே கோவில்பட்டி தொகுதியில் திமுக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில், தனி மாவட்டமாக அறிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ளது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில், திமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக தென் மாவட்டங்களில் திமுக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் இதுவரை திமுக கைக்கு எட்டாத ஒரு தொகுதியில் முக்கியமான ஒன்று கோவில்பட்டி. 1962, 1989, 2001 மற்றும் 2016 என்று 4 முறை திமுக நேரடியாக போட்டியிட்ட போதும், ஒருமுறைக் கூட வென்றதே இல்லை. 2016 தேர்தலில் கூட 428 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் 2021ஆம் ஆண்டு கோவில்பட்டி தொகுதியை சிபிஎம் வசம் திமுக கொடுத்தது.
கடந்த தேர்தலில் சிபிஎம் கூட 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிமுகவுக்கு வெற்றி கிடைத்த நிலையில், 2வது இடத்தை டிடிவி தினகரன் பிடித்தார். ஆனால் இம்முறை கோவில்பட்டியில் திமுகவை வெல்ல வைக்க வேண்டும் என்பதில் உடன்பிறப்புகள் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி இருப்பதால், கனிமொழியும் தொடர்ச்சியாக கோவில்பட்டிக்கு வந்து செல்கிறார்.
ஒவ்வொரு முறையும் தூத்துக்குடி வந்து செல்லும் போதும், கோவில்பட்டிக்கு தவறாமல் வருகிறார் கனிமொழி. இதனால் கோவில்பட்டியில் திமுக நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் கோவில்பட்டி தொழில் சார் பகுதி என்பதால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தாக்கல் அதிகமாகும். ஆனால் கடம்பூர் ராஜூவுக்கு எதிராக நேரடியாக திமுக வேட்பாளரை களமிறக்க திமுக திட்டமிட்டு வருகிறது.
அதற்காக இப்போதே டீ கடைகளில் திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கோவில்பட்டியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை முன் வைத்து அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக அதனை கவனமாக கண்காணித்து வருகிறது.
இதனால் விரைவில் கோவில்பட்டியை புதிய மாவட்டமாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக உடன்பிறப்புகள் கூறி வருகின்றனர். அதேபோல் மீண்டும் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக உடனான நட்பு மூலமாக உள் ஒதுக்கீட்டில் அமமுகவுக்கு கோவில்பட்டியை ஒதுக்க சில நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தில் நிற்காமல் குக்கர் சின்னத்தில் நின்றால், அங்கு உதயசூரியன் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் நாடார் சமூக வாக்குகளை தென் மாவட்டங்களில் கனிமொழி தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறார். இதனால் கோவில்பட்டியில் இம்முறை களம் தீவிரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications