முருகன் மாநாடு.. வலிமை இல்லாதவர்கள்தான் கோவில், மதத்தை பயன்படுத்துகிறார்கள்.. கனிமொழி அட்டாக்!
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் யாரிடம் வலிமை இல்லையோ, அவர்கள் மதத்தை பயன்படுத்தி ஏதாவது கிடைக்குமா என்று தேடி கொண்டே இருப்பார்கள் என்று திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். அடையாளத்தை காண்பதற்காக கோயிலையும், மதத்தை பயன்படுத்தி கொள்வதாக கூறிய கனிமொழி, இதுபோன்ற விஷயங்களை நிறைய பார்த்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரை நடத்தினார். அதன்பின் தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனாலும் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வென்றது. தற்போது மீண்டும் சட்டமன்றத் தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில், மதுரையில் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நடக்க உள்ளது.

மதுரை வண்டியூர் அருகே உள்ள திடலில் முருகன் மாநாட்டை நடத்துவதற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ள பக்தர்களின் எழுச்சிக்காக திரைத்துறை, அரசியலாவ்திகள், ஆன்மீகவாதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்பதாக சொல்லப்படுகிறது. மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூட முருகன் மாநாடு தொடர்பாக பேசி இருந்தார். இந்த மாநாட்டின் சிறப்பு அம்சமாக கந்த சஷ்டி கவசத்தை ஆயிரக்கணக்கானோர் ஒரே குரலில் பாடவுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஆன்மிக உரைகள், கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைகளும் அரங்கேறப்பட உள்ளது. இதனிடையே இந்து முன்னணி சார்பாக நடக்கும் முருகன் மாநாட்டை, அமைச்சர் சேகர்பாபு சங்கி மாநாடு என்று விமர்சித்தார். இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், யார் வலிமையில்லாமல் இருக்கிறார்களோ, அவர்கள் மதத்தை பயன்படுத்தி ஏதாவது கிடைக்குமா என்று தேடி கொண்டிருப்பார்கள்.
அதை நிறைய பேர் செய்யும் சூழலை பார்த்திருக்கிறோம். அடையாளத்தை காண்பதற்காக அவர்கள் கோயிலையும், மதத்தையும் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை தொடர்பான கேள்விக்கு, திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது என்பது தெரியும்.
அது எப்படி நடக்க வேண்டும் என்பதை அறநிலையத் துறையும், கோயிலுக்கு வரக் கூடிய பக்தர்களும் முடிவு செய்ய வேண்டும். இதனை அரசியல்வாதிகள் முடிவு செய்ய கூடாது. தமிழ்க் கடவுள் முருகன் என்று கொண்டாடும் நிலையில், தமிழில் நடத்த கூடாது என்று யாருடைய கருத்தாகவும் இருக்க முடியாது என்றும் பதில் அளித்துள்ளார். 2016ஆம் ஆண்டு முதலே சீமான் இந்த கோரிக்கையை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications