அண்ணாமலை ஒரு அரைவேக்காடு.. அவருக்கு எப்படி ஐபிஎஸ் பதவி கொடுத்தார்கள்.. கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
அண்ணாமலை ஒரு அரைவேக்காடு என்று ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று கூட தெரியாமல் இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டியுள்ளதாக பேசிய ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு எப்படி ஐபிஎஸ் பதவி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சியில் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் திமுக ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.

திமுக ஆட்சி
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை பார்த்து, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தங்களுக்கு வாக்களித்தால் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய பல திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரைவேக்காடு அண்ணாமலை
நான் அரசியலுக்கு வந்தபோது, அண்ணாமலையின் தந்தை கூட பிறந்திருக்க மாட்டார். ஆனால் இப்போது அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டியுள்ளது. பாஜகவினர் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் சனாதன ஆட்சி நடத்த வேண்டும். அதுதான் நன்மை என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகிறார். பெண்கள் மேலாடை அணிந்திருந்தால் வரி, ஆண்கள் தாடி வைத்திருந்தால் வரி என்ற நிலைதான் கடந்த காலங்களில் இருந்தது. இதையெல்லாம் பெரியார், நாராயண குரு, அய்யா வைகுண்டர் போன்றோர் போராடி நீக்க வைத்தனர்.

திராவிடம்
திராவிடம் என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு வேப்பம் காயாக கசக்கிறது. ஆகையால் தான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது திராவிட மாடல் ஆட்சி என்றார். திராவிட மாடல் ஆட்சி என்றால் ஆரியர்களுக்கு எதிரான ஆட்சி. சீமான் பின்னால் செல்லும் இளைஞர்களை அழைத்து இதுபோன்ற வரலாறு குறித்து வகுப்பு எடுக்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் பயங்கரமான ஊழல் நடைபெற்று வருகிறது. அங்கெல்லாம் ஆளுநர்கள் வாய் மூடி மவுனமாக இருக்கிறார்கள். ஆனால் பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களுக்கு தொல்லை கொடுப்பதற்காகவே ஆளுநர்களை அவர்கள் வைத்துள்ளனர்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய்
தமிழ்நாடு முதலமைச்சர் அதனை சாமர்த்தியமாக சமாளித்து வருகிறார். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவிகிதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார். வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தொடர்பாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துவிட்டார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் பெண்கள், முதலமைச்சரை மகனாக சகோதரனாக பார்க்கிறார்கள். பெண்கள் ஒரு கட்சியை ஆதரிக்க தொடங்கிவிட்டால் 10 ஆண்டுகளுக்கு அந்த ஆட்சி கட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதே கடந்த கால வரலாறு.

அண்ணாமலை உளறுகிறார்
அண்ணாலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று தெரியவில்லை. இவருக்கு எப்படி ஐபிஎஸ் பதவி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அண்ணாமலை சொல்வதில் ஒன்று கூட உண்மையில்லை. ஜெயலலிதாவின் ஆளுமையை, அண்ணமாலை அவருடைய தாய், மனைவியுடன் ஒப்பிட்டு பேசுகிறார். அண்ணாமலை மிரட்டலாம் என்று பார்க்கிறார். நாங்கள் இந்திரா காந்தியை பார்த்தவர்கள், மிசாவை சந்தித்தவர்கள், சர்காரிய கமிஷனை தவிடு பொடியாக்கிய கட்சி என்பதனை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications