தூத்துக்குடியில் பெண் உள்பட இருவர் கொலை! அரை மணி நேரத்தில் கொலை நகரமாக மாறிய கோவில்பட்டி!
தூத்துக்குடி : தூத்துக்குடியில் பெண் உள்பட இருவர் அடுத்தடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (25). இவர் நேற்று முன் தினம் இரவு நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார்.

அப்போது கடை முன்பு நின்று கொண்டிருந்த பிரகதீஸ்வரனை அங்கு வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதை அறிந்த அவருடைய நண்பர்கள் சிலர் அரிவாளுடன் செண்பகா நகரில் உள்ள சதீஷ் மாதவன் (26) என்பவரது வீட்டிற்கு சென்றனர்.
அங்கு வீட்டின் முன் தனியாக நின்று கொண்டிருந்த மாதவனின் தாய் கஸ்தூரியை அந்த கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. தடுக்க முயன்ற உறவினர் செண்பகராஜாவுக்கு அரிவாள் வெட்டு விழுந்து காயம் ஏற்பட்டது.
சுமார் அரை மணி நேரத்தில் இப்படி இரு கொலைகள் நடந்ததால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கோவில்பட்டி கிழக்கு போலீஸார் விசாரணையை தொடங்கினர். டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், கொலை நடந்த இடங்களை ஆய்வு செய்தார். மேலும் கொலையாளிகளை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த சதீஷ் மாதவன், செல்லத்துரை உள்பட 8 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோயில் வளாகத்தில் சதீஷ் மாதவனும் அவருடைய நண்பர்களும் மது அருந்தியதை பிரகதீஸ்வரன் கண்டித்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் சதீஷ் மாதவன் மீது கோவில்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தனது நண்பரின் திருமணத்தில் பிரகதீஸ்வரன் வைத்த டிஜிட்டல் பேனரை சதீஷ் கிழித்தாராம். இது தொடர்பாக தகராறு எழுந்த போது பிரகதீஸ்வரனையும் அவரது தந்தை ஆனந்தனையும் கொலை செய்துவிடுவதாக சதீஷ் மிரட்டினாராம்.
இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஆனந்தன் ஏப்ரல் 29ஆம் தேதி புகார் அளித்தார். ஆனால் போலீஸார் வழக்கை பதிவு செய்யாமல் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
பிரகதீஸ்வரனும் சதீஷும் நண்பர்களாகத்தான் இருந்தார்களாம். ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரிடம் இருவரும் சேர்ந்து வேலை செய்தனராம். அந்த நபர் சிறை சென்றதால் யார் பெரியாள் என்ற மோதலில் இருவரும் தனித்தனியே ஆட்களை வைத்துக் கொண்டு ரேஷன் அரிசி உள்ளிட்டவைகளை கடத்துவது, சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்களாம்.
இந்த கொலைகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும் போது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற இரட்டைக் கொலையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது ஜாதி ரீதியான கொலையோ அல்லது ஏற்கெனவே பகை காரணமாக நடந்த கொலையோ அல்ல. இந்த கொலையை பொருத்தமட்டில் இரண்டு தரப்பினர் டிஜிட்டல் போர்டு வைத்த விவகாரத்தில் வந்த சண்டை கொலையாக மாறி உள்ளது.
கொலை தகவல் கிடைத்தவுடன் போலீஸார் அந்த இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். உடனடியாக கொலையாளிகளை கைது செய்துள்ளனர். போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து வருகிறது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது.
தற்போது கைப்பற்ற கூடிய போதைப் பொருட்களின் அளவு குறைந்துள்ளது. கடந்த வருடம் 3 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தற்போது ஒரு கிலோ வரை தான் வருகிறது. பறிமுதல் செய்யும் அளவு குறைந்துள்ளது. சப்ளை செய்கின்ற நபர்களையும் கைது செய்து வருகிறோம்.
குற்றவாளிகள் கைது செய்யும் நடவடிக்கையும் அதிகப்படுத்தி உள்ளோம். குற்றவாளிகள் அதிகமாக கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications