சனாதனத்தை திராவிடப் பெருநிலம் ஒருநாளும் ஏற்றது இல்லை.. ஆளுநர் அமைதி காக்கவும்.. கனிமொழி விமர்சனம்
தூத்துக்குடி: 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்று தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஆளுநரின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர்.என். ரவி தான் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசி வருகிறார். ஆளுநரின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை திருவல்லிகேணியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, "தமிழ்நாடு என்று நாம் இன்று சொல்லும் இந்த பகுதி புனிதமான ஒரு இடம். மனித நேயத்திற்காக ராகவேந்திரா வாழ்ந்தார். இங்கு பல ஆன்மிக சிந்தனையாளர்கள் உருவாகி உள்ளனர். சனாதன தர்மம் தொடங்கவும் பாரத் என்ற இந்த நாடு உருவாகவும் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்துள்ளது. சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்துகிறது, பாகுபாட்டை வலியுறுத்துகிறது என்று பலர் சொல்கிறார்கள்.
சனாதன தர்மம் மனிதர்கள் இடையே தீண்டாமையை ஒருபோதும் வலியுறுத்தவில்லை. இந்த நாடு 1947ஆம் ஆண்டு உருவானது என பலர் நினைக்கின்றனர், இது மிகவும் நகைச்சுவையான ஒன்றாகும். இந்தியா ஒரு சனாதன நாடு. பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் பிரிக்கவே முடியாது என ரிஷி அரவிந்த கோஷ் தெரிவித்துள்ளார். சனாதன தர்மம் இந்த உலகம் ஒரு குடும்பம் என கூறுகிறது. அதுதான் யாதும் ஊரே யாவரும் கேளிர்.

இந்த நாடு சனாதன தர்மத்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்துள்ளது. பத்தாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் இந்த வாழ்க்கை முறை உள்ளது. வேறு எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு வாழ்க்கை முறை இல்லை" என்றார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் பதில் கருத்துக்களை கூறி வருகின்றனர். திமுக எம்.பி கனிமொழி ஆளுநரின் இந்த கருத்தை மறுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கனிமொழி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:-
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை. தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை! நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி அவர்கள், சிறிது நேரம் அமைதி காக்கவும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications