கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பெட்ரோல் பங்க்கில் சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டதால் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த 10 பேர் கொண்ட கும்பல், ஊழியர்களை தாக்கியதோடு, பெட்ரோல் பங்க்கை அடித்து உடைத்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தூத்துக்குடி ராமேஸ்வரம் சாலையில் அரசடி பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் எரிபொருள் நிரப்ப வந்துள்ளனர். அவர்களில் ஒரு நபர் பெட்ரோல் பங்க்கில் உள்ள கழிப்பறையில் சென்று சிறுநீர் கழிக்காமல் பெட்ரோல் பங்க் அருகே வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பும் பகுதி அருகே சிறுநீர் கழித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அங்கே வேலை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர் சிறுநீர் கழித்த நபரிடம் இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள் என்று சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அந்த மூன்று பேர் கொண்ட கும்பல் எங்களிடமே தகராறு செய்கிறாயா என்று உன்னைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் 10 பேருடன் வந்த அந்த போதை கும்பல், பெட்ரோல் பங்க் உள்ளே நுழைந்து ஊழியர்களை கட்டை மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளது. மேலும் பெட்ரோல் பங்க் அலுவலகத்தையும் அடித்து உடைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஊழியர் சவுரவ் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தாளமுத்து நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் பெட்ரோல் பல்கை 10 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications