திருச்செந்தூரில் எடப்பாடி பழனிச்சாமி..சஷ்டி நாளில் சத்ரு சம்ஹார மூர்த்தியிடம் ஸ்பெஷல் வேண்டுதல்
தூத்துக்குடி: முருகப்பெருமானுக்கு உகந்த தினமான இன்று திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சாமி தரிசனம் செய்தார். எதிரிகள் தொல்லை ஒழிய சத்ரு சம்ஹார மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியில் நீடிக்கிறது. அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்து கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. எனவேதான் வலிமையான கூட்டணியாக அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்று சொல்வதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்று சொல்லி பிடிகொடுக்காமல் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் இன்று திருச்செந்தூர் வந்து சுப்ரமணியசுவாமி கோவிலில் வழிபட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டட்திற்கு இன்று வருகை தந்தார். இன்று காலை 7.30 மணி அளவில் அவர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்செந்தூர் வரைக்குமே மாஸ் ஆன வரவேற்பினை போட்டி போட்டுக்கொண்டு கொடுத்தனர் அதிமுகவினர்.

இதனை தொடர்ந்து திருச்செந்தூர் வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சென்றார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்தார். சுவாமி மூலவர், சண்முகர், சத்ருசம்கார மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்ட பின்னர் திருச்செந்தூரில் இருந்து கிளம்பி சென்றார்.
சனிக்கிழமையான இன்றைய தினம் சஷ்டி திதியும் இணைந்து வந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில். சூரனை சம்ஹாரம் செய்த தலம். கடற்கரை ஓரத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த தலம். சஷ்டி திதியில் சத்ரு சம்ஹார மூர்த்தியை வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும் என்பது நம்பிக்கை. அரசியல் எதிரிகள் தொல்லை ஒழிய இன்றைய தினம் திருச்செந்தூரில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications