தமிழகமெங்கும் எடப்பாடி பழனிசாமி அலை வீசுகிறது... சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
தூத்துக்குடி: தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலை வீசுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது மறைமுக வாக்கெடுப்பு நடத்தினால், திமுக எம்.எல்.ஏக்கள் 40 பேர் அதிமுகவிற்கு சாதகமாக வாக்களிப்பார்கள் என்றும் அண்ணா அறிவாலயம் பக்கம் வராத எம்.எல்.ஏக்கள் எத்தனை பேர் என மு.க.ஸ்டாலின் எண்ணிப்பார்க்கட்டும் என்றும் கூறினார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை கவிழ்க்க எதிரிகள் ஒருபுறம், துரோகிகள் மறு புறம் கைகோர்த்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார். கிராமங்கள் தோறும் எடப்பாடி பழனிசாமி அலைதான் வீசுவதாகக் கூறிய ராஜேந்திர பாலாஜி, மீண்டும் திமுக ஆட்சி வரக்கூடாது என மக்கள் விழிப்புடன் இருப்பதாகக் கூறினார்.
மாணவர்களை இந்தி படிக்கவிடாமல் திமுக தடுத்ததால் தான், ரயில்வே துறை உள்ளிட்ட மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்தார்.
மத்திய அரசு வேலைகள் தமிழர்களுக்கு அதிகம் கிடைக்காமல் போனதற்கு காரணம் திமுக தான் என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, தங்களைத் தவிர யாரும் இந்தி படிக்கவிடாமல் அவர்கள் (ஸ்டாலின் குடும்பத்தினர்) தடுத்ததாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications