மூட்டை மூட்டையாய் அரிசி.. பசியில் தவித்த புன்னக்காயல் மக்கள்.. கடல் வழியே உதவிய மீனவர்கள் - நெகிழ்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ள புன்னக்காயல் கிராமத்தில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. அரசின் உதவிகள் மக்களை சென்றடையாத நிலையில் அருகே உள்ள மீனவ கிராமத்தினர் கடல் வழியாக படகில் சென்று மூட்டை மூட்டைகளாக அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி நெகிழ வைத்தனர்.
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தொடர்ந்து தென்தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ககடந்த 17, 18 தேதிகளில் இடைவிடாது மழை பெய்தது.

இந்த மழையில் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் ஓரளவு பாதிக்கப்பட்டன. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்பை சந்தித்தது. வரலாறு காணாத வகையில் தொடர்ந்து அதிகமாக கொட்டித்தீர்த்த மழையே இதற்கு காரணமாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தமட்டில் சாலைகள், கிராமங்களை முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் விமான, ரயில் போக்குவரத்தும் முடங்கியது. படகுகள் கூட செல்ல முடியாத அளவிற்கு பெருவெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் மக்கள் உதவியின்றி தவித்தனர். கிராம இளைஞர்களை துணிச்சலாக செயல்பட்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
தற்போது அங்கு மழை குறைந்துள்ள நிலையில் வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கினார். இது ஒருபுறம் இருக்க தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் மழைநீர் வடியவில்லை. வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
மேலும் பல கிராமங்களில் அரசு உதவிகள் கிடைக்காத நிலை உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள புன்னக்காயல் கிராமத்தில் மழைநீர் இன்னும் வடியாமல் அப்படியே தேங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அங்கு ஓடும் தாமிரபரணி ஆறுதான். திருநெல்வேலி மாவட்டம் பொதிகை மலையில் உருவாகும் தாமிரபரணி ஆறு இந்த புன்னக்காயல் கிராமத்தில் தான் கடலில் கலக்கும். ஆனால் தாமிரபரணியில் திறக்கப்பட்ட அதிகபட்ச தண்ணீரால் கிராமத்துக்குள் தண்ணீர் சூழ்ந்தது.
இதனால் புன்னக்காயல் கிராமம் குட்டி தீவுப்போல் காட்சியளிக்கிறது. இத்தகைய சூழலில் தான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பசியால் துடித்தனர். இதனையறிந்தவுடன் அருகே உள்ள மீனவ கிராமத்தினர் படகு மூலம் கடல் வழியாக புன்னக்காயல் கிராமத்துக்கு சென்று மூட்டை மூட்டையாக அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை புன்னக்காயல் மக்களுக்கு வழங்கினர். மேலும் தண்ணீர் பாட்டில்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மீனவ கிராம மக்களின் இந்த உதவியால் புன்னக்காயல் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications