15 பேர் படுகொலை- தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. இன்று 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி- பலத்த பாதுகாப்பு!
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 2018-ம் ஆண்டு தூத்துக்குடி போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 பேர் படுகொலை செய்யப்பட்டதன் 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.
Recommended Video
பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை
தூத்துக்குடியில் காற்றையும் நீரையும் நச்சாக்கி மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளியது வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலை. ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக் கோரி மக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்கள் ஒவ்வொன்றும் போர்க்களமாக மாறின. இதன் உச்சமாக 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பேரணியாக சென்றனர். இந்த பேரணியை கலைக்க போலீசார் கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். நாட்டையே பதற வைத்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பொதுமக்கள் அஞ்சலி
இப்படுகொலை சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளன. துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவபடங்களுக்கு குமரெட்டியாபுரம், மடத்தூர்,பண்டாரம்பட்டி ,பாத்திமா நகர் ,திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதியில் கண்டன கோஷங்களை எழுப்பி மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பாதுகாப்பு- டாஸ்மாக் மூடல்
இந்த நிகழ்ச்சிகளை முன்னிட்டு பல்வேறு மாவட்ட போலீசார் தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் முன்னெச்சரிக்கையாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு தூத்துக்குடிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்குள் நுழையும் வாகனங்கள் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன. அத்துடன் தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 54 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டு இருக்க வேண்டும் எனவும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள்
இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு சென்னை உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகங்களில் இந்த அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.