மோடியை பற்றி பேசினால் தொகுதிக்குள் நுழைய முடியாது! திமுக எம்.எல்.ஏ.வுக்கு அண்ணாமலை பகிரங்க மிரட்டல்!
தூத்துக்குடி: பிரதமர் மோடியை பற்றி இன்னொரு முறை தவறாக பேசினால் உங்களால் விளாத்திக்குளத்தில் காலெடுத்து வைக்க முடியாது என திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி வருகிறார். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், மாவட்டங்களை முடித்துக்கொண்டு தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பாதயாத்திரை நடத்தி வருகிறார்.

இடையே மூன்று நாட்கள் சென்னைக்கு சென்று ஓய்வும் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் பாதயாத்திரை சென்ற அண்ணாமலையிடம், லோக்கல் பாஜக நிர்வாகிகள் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயன் பற்றி கொளுத்திப் போட்டனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிரதமர் மோடி தான் காரணம் என சில மாதங்களுக்கு முன்பு அவர் பேசியதை நினைவூட்டினர். இதையடுத்து பிரச்சார வாகனத்தில் பேசிய போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனை அண்ணாமலை வறுத்தெடுத்துவிட்டார். அதோடு மட்டுமல்ல அப்போது பேசியது போல், இன்னொரு முறை பிரதமர் மோடியை பற்றி தவறாக பேசினால் மார்கண்டேயனால் விளாத்திக்குளத்தில் காலெடுத்து வைக்க முடியாது என மிரட்டல் விடுத்திருக்கிறார் அண்ணாமலை.
இதனால் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர் பேசும் பேச்சா இது என விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன. மார்கண்டேயனை பொறுத்தவரை 2011-2016 அதிமுக ஆட்சிகாலத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அதிமுகவில் எழுந்த உட்கட்சி குழப்பத்தால் திமுகவில் இணைந்து தற்போது எம்.எல்.ஏ.வாக ஆகிவிட்டாலும் இன்னும் ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருக்கிறார் மார்கண்டேயன்.












Click it and Unblock the Notifications