இது அதிமுக ராசி.. “முதலில் பூஜ்ஜியம்’.. நவம்பரில் தெளிவு கிடைக்கும்.. கடம்பூர் ராஜூ ஆரூடம்!
தூத்துக்குடி : வரும் நவம்பர் மாதத்தில் அதிமுகவில் தெளிவு ஏற்படும், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வருவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40க்கு 40 தொகுதிகளை ஜெயித்தால், திமுக ஆட்சி தானாக முடிவுக்கு வரும் என்றும் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் காரணமாக கட்சி பிளவுபட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கடம்பூர் ராஜூ, அதிமுக கட்சி கொடியும், இரட்டை இலை சின்னமும் எங்களிடம் தான் உள்ளது எனக் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். இந்த விழாவில் ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார் கடம்பூர் ராஜூ.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது
இந்த விழாவில் பேசிய கடம்பூர் ராஜூ, "1998-ல் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தற்போது திமுக ஆட்சியில் கோயம்புத்தூரில் மீண்டும் நிகழ்ந்துள்ளது. நல்லவேளையாக மாட்டிக்கொண்டார்கள். இல்லையென்றால் நாடே சின்னாபின்னமாகி இருக்கும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

பார்த்தாலே ஷாக்
முன்பெல்லாம் மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால் திமுக ஆட்சியிலோ, மின் கட்டண ரசீது வந்தாலே ஷாக் அடிக்கிறது. மக்கள் தைரியமாக நெஞ்சை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் சொத்து வரி பல மடங்கு உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் ஒரு நல்ல திட்டம் கூட வரவில்லை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

தேர்தல் வரட்டும்
இலங்கை போல் தமிழகத்திலும் மக்கள் எழுச்சி பெற்று திமுக ஆட்சி அகற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். தேர்தல் வரட்டும் என மக்கள் காத்திருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40-40 ஜெயித்தால், திமுக ஆட்சி தானாக முடிவுக்கு வரும். தமிழ்நாட்டு மக்களுக்கு விடியல் வரும்.

உள்ளங்களை ஆளும் கட்சி
தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் ஆரம்பித்தும் காணாமல் போய்விட்டன. விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக தேய்ந்துவிட்டது. ஆனால், என்றைக்கும் நம்பர் 1 கட்சியாக நிலைத்து நிற்பது அதிமுக தான். அதிமுக இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால், மக்கள் உள்ளங்களை ஆளும் கட்சியாக இருக்கிறது.

3 எழுத்து ராசி
அதிமுகவிற்கும் 3 எழுத்துக்கும் ஒரு ராசி உண்டு, அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோருக்கு 3 எழுத்து, ஈபிஎஸ்க்கும் 3 எழுத்து. இன்னொருவருக்கும் (ஓபிஎஸ்) 3 எழுத்து தான். ஆனால், அவருக்கு முதல் எழுத்து பூஜ்ஜியம் என்பதால் அவர் கணக்கில் வரமாட்டார். அதிமுகவில் இன்று உள்ள நிலை போல 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி வரும்.

நவம்பரில் தெளிவு
வரும் நவம்பர் மாதத்தில் அதிமுகவில் தெளிவு ஏற்பட்டு, 3வது அத்தியாயமாக எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வருவார். ஒரு சாதாரண விவசாயி, முதலமைச்சர் ஆக முடியும் என்பது அதிமுகவின் வரலாறு. அதிமுக கட்சி கொடியும், இரட்டை இலை சின்னமும் எங்களிடம் தான் உள்ளது. எழுச்சியுடன் அதிமுக மீண்டும் வெற்றி பெறும்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications