தூத்துக்குடியில் கனிமொழி போட்டி.. அமைச்சராக போகிறார்.. டிக்ளேர் செய்தார் கீதா ஜீவன் !
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவது கன்ஃபார்ம் ஆகிவிட்டது. ஏனெனில், கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று கீதாஜீவன் எம்எல்ஏ உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட 3 வருஷத்துக்கு முன்னாடியே கனிமொழி முடிவெடுத்துவிட்டார். அதன்விளைவுதான் ஸ்ரீவெங்கடேசுவரபுரம் பஞ்சாயத்தை தத்தெடுத்ததும், 16 லட்சம் ரூபாயை ஒதுக்கி பல வளர்ச்சி பணிகளை அங்கு செய்ததற்கு காரணம்.
இதைதவிர ஸ்டெர்லைட் விவகாரம் சூடு பிடித்தபோது, அங்கு நடந்த எத்தனையோ கூட்டங்களில் கனிமொழி பங்கேற்று அந்த மாவட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்தார்.
கிராம சபை கூட்டம்
இப்போதுவரை அங்கிருக்கும் தொழிலதிபர்கள், நாடார் சங்கங்கள் என பல தரப்பினரையும் நேரில் சந்தித்து பேசியும் வந்து கொண்டிருக்கிறார். இதைதவிர கிராம சபை கூட்டத்தை தூத்துக்குடியில் நடத்த திமுக தலைவரே அனுமதியும் கொடுத்துவிட்டார். இதனால் அந்த தொகுதியில் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறார் கனிமொழி.
தூத்துக்குடி தொகுதி
இப்போது தேர்தலும் நெருங்கி வருவதுடன், தொகுதி ஒதுக்கீடுகளும் பல கட்சிகளில் மும்முரமாகி வரும் நிலையில், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட உள்ளதாக தகவல் வந்தது. ஆனால் இந்த தகவலை இப்போது கீதாஜீவன் எம்எல்ஏவே உறுதிப்படுத்தி உள்ளார்.
கீதாஜீவன் பேச்சு
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்தான் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான கீதாஜீவன் பேசும்போது இந்த தகவலை வெளிப்படுத்தினார்.
சரளமான ஆங்கிலம்
அப்போது அவர் சொன்னதாவது: "பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். அதனால் இந்த தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிட போகிறார். 10 ஆண்டுகளாக அவர் எம்பியாக இருந்து வருகிறார். ஆங்கில புலமை நிறைந்தவர்.
வளர்ச்சி திட்டங்கள்
இந்த தொகுதியில் உள்ள பிரச்சினைகளை முழுசாக அறிந்தவர். இங்கு அவர் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக நிச்சயம் பொறுப்பேற்பார். அதன்பிறகு நம் மாவட்டத்தின் குறைகள் எல்லாம் போக்கப்பட்டு, நிறைய வளர்ச்சி திட்டங்கள் வந்து சேரும்" என்றார்.
கைவசம் திட்டங்கள்
கீதாஜீவனின் இந்த தகவலை அடுத்து தொகுதி மக்கள் உற்சாகமாகி உள்ளனர். ஏனெனில் இந்த தொகுதியில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றால், விமான நிலைய விரிவாக்கம் குறித்தும், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி வாங்குவது குறித்தும் மத்திய அரசிடம் அணுகி அனுமதி வாங்கலாம் என்பது போல பல திட்டங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதனால் தூத்துக்குடியில் கனிமொழியை வெற்றி பெற வைக்கும் வேலையில் திமுக தரப்பினர் ரவுண்டு கட்டி இறங்கி வருகின்றனர்.