ஆளுநர் பதவி அலங்கார பதவி.. அதை தூக்கி போட வேண்டிய காலம் வந்துவிட்டது.. கனிமொழி காட்டம்
தூத்துக்குடி: ஆளுநர் பதவி என்பது ஒரு அலங்கார பதவி என அம்பேத்கரே சொல்லியிருக்கிறார் என தூத்துக்குடி எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்று இரு ஆண்டுகள் முடிந்துள்ளது. இதையொட்டி திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் தூத்துக்குடி அண்ணாநகரில் நேற்று இரவு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.
அது போல் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களை திமுக ஆட்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. மீன்பிடித் தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கக் கூடிய நிவாரண உதவியை ரூ 6000மாக உயர்த்தி வழங்கியது திமுக அரசு.

நெய்தல் நிலங்களை பாதுகாக்க ரூ 2000 கோடி இந்த ஆட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. தூத்துக்குடியில் குருஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உப்பள தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கூறுவது பல் திராவிட மாடல் என்பது காலாவதியானது அல்ல. அவருடைய பதவித்தான் காலாவதியானது.
பிரிட்டிஷ் அரசின் மிச்சம், எச்சம்தான் ஆளுநர் பதவி, அதை தூக்கிப் போட வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையைக் கொண்டு செயல்படுவது திராவிட மாடல் ஆட்சி. எல்லோருக்கும் எல்லாம் என அனைத்தையும் பகிர்ந்து கொடுத்தது திராவிட ஆட்சி. ஆளுநர் பதவி ஒரு அலங்கார பதவி. அதற்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டாம் என டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார்.

அவசியம் இல்லாத அலங்காரம் களையப்படும். தூக்கி எறியப்படும் என கனிமொழி தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திராவிட மாடல் காலாவதியான மாடல் என கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு திமுக நிர்வாகிகளும் கடுமையாக விமர்சித்திருந்தனர். திராவிட மாடல் காலாவதியானது என்றால் குஜராத் மாடல் எப்படி? என கேட்டனர்.
அண்மைக்காலமாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் தடை சட்டமசோதா உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது தொடர்பாக ஆளுநருடன் தமிழக அரசுக்கு மோதல் போக்கு இருந்தது. அது போல் தமிழக சட்டசபை, செல்லும் நிகழ்ச்சிகள் என எங்கு பார்த்தாலும் ஆளுநர் , திமுக அரசை விமர்சித்து பேசுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் கடந்த சில மாதங்களாக ஆளுநரே வேண்டாம் என கூறி வரும் நிலையில் தற்போது ஆளுநர் பதவி தூக்கி எறியப்படும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications