பெற்றோரை தொலைத்த ஒன்றரை வயது குழந்தை! அள்ளி அரவணைத்துக் கொண்ட கனிமொழி.. நெய்தல் விழாவில் நெகிழ்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற நெய்தல் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராகக் கனிமொழி கருணாநிதி உள்ளார். தூத்துக்குடியில் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு வருகிறார்.
இதனிடையே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி பெற்றோரைத் தவறவிட்ட குழந்தையை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெய்தல் விழா
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் ஸ்பிக் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நெய்தல் கலை விழா கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தமிழர்களின் பண்பாடு, கலை, கலாச்சாரம், நாகரீகத்தைப் பறைசாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 கிராமிய கலைஞர்கள் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

மக்கள் கூட்டம்
கடைசி நாளான நேற்று (ஜூலை 10) இரவு சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கணியான் கூத்து, சூபி இசை நிகழ்ச்சி, கைச்சிலம்பம், களியில், பறையாட்டம், இசை நிகழ்ச்சி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளைக் காண இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வஉசி கல்லூரி வளாகத்தில் திரண்டனர். சுமார் 5,000 மேற்பட்ட மக்கள் குவிந்ததால் வளாகமே திருவிழாக் கோலம் பூண்டது.

அரவணைத்துக் கொண்ட கனிமொழி
அப்போது கூட்டத்தில் ஒன்றரை வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோரைத் தவற விட்டு இடைவிடாது அழுதவாறு இருந்ததைக் கண்ட மக்கள், நாடாளுமன்ற உறுப்பினரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே குழந்தையை அழைத்து வரச் சொன்ன நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தனது மடியில் அமர வைத்துக் கொண்டார். பெற்றோர் வரும் வரை தனது அரவணைப்பில் வைத்துக்கொண்டார்.

பெற்றோர்
பின்னர் மேடையில் மைக் மூலம் மூலம் குழந்தையின் பெற்றோர் உடனடியாக வந்து குழந்தையை அழைத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மேடை அருகே வந்த காசிலிங்கம், மதிமலர் தம்பதியினர் தங்கள் குழந்தை தான் எனக் கூறினர். அவர்களின் குழந்தை தானா என்பதை உறுதி செய்ய, தம்பதியின் மொபைல்போனின் இருந்த படங்களை செக் செய்தனர்.

அட்வைரஸ்
இதையடுத்து ஜெர்ஸாவை பெற்றோரிடம் ஒப்படைத்தார். இது போன்ற கூட்ட நெரிசல்களில் குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் குழந்தையின் பெற்றோருக்குக் கனிமொழி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இதையடுத்து நடைபெற்ற நிறைவு விழாவுக்குக் கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.












Click it and Unblock the Notifications