ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச் சூழல் தினம்... கிராமமக்களுக்கு கனிமொழி அளித்த பரிசு..!
தூத்துக்குடி: உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கஸ்பா கிராமமக்களுக்கு கனிமொழி எம்.பி. பரிசு ஒன்றை அளித்திருக்கிறார்.
கடந்தாண்டு கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது, குளத்தை தூர்வாரி கொடுக்க வேண்டும் என கிராமமக்கள் முன் வைத்த கோரிக்கையை இப்போது நிறைவேற்றி செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்.
என்றோ தாங்கள் வைத்த கோரிக்கையை நினைவில் வைத்து நிறைவேற்றிக் கொடுத்துள்ளதாக கனிமொழிக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்கள் ஆத்தூர் கஸ்பா கிராமமக்கள்.
ஸ்டெர்லைட் ஆலை சூழல் கேடுகளையும் மக்களின் அச்சங்களையும் எளிதில் புறந்தள்ள முடியாது - கனிமொழி
கனிமொழி எம்.பி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் கஸ்பா கிராமத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு கிராம சபைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார் கனிமொழி எம்.பி. அப்போது அவரை சந்தித்த ஊர்மக்கள், "ஆத்தூர்ல பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் இருக்கிறது. இந்த குளத்தால சுத்தியுள்ள 16 கிராமங்கள் குடிதண்ணீர் பெறுது. இந்த குளத்து தண்ணியால 2000 ஏக்கருக்கும் மேல விவசாயம் நடந்திருக்கு. கடல்லேர்ந்து 7 கிலோ மீட்டர் தூரத்துக்குள்ள இந்த ஊர் இருக்கு. அதனால நிலத்தடி நீரெல்லாம் உப்பாகுற அபாயத்துல இருக்கிறது. இந்த குளத்தை ரொம்ப வருஷமா தூர் வாரவேயில்லை. அதனால இப்ப இந்த குளத்தின் ஆழம் குறைஞ்சு பல செடிகொடிகள் புதர்கள் மண்டிக் கிடக்கு. இதையெல்லாம் அகற்றி குளத்தை தூர்வாரினா இந்த சுத்து வட்டாரத்துல விவசாயம் செழிக்கும், நிலத்தடி நீரும் உப்பாகாம தடுக்கலாம். இடையில இந்த குளத்துக்காக அரசாங்கம் 50 லட்சம் ஒதுக்குனதா சொன்னாங்க. ஆனா எதுவுமே நடக்கலை. அதனால நீங்கதான் கவனம் எடுத்து இந்த ஆத்தூர் கஸ்பா குளத்தை தூர்வாரி கொடுக்கனும்" என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
தன்னார்வ அமைப்பு
இதையடுத்து ஆத்தூர் கஸ்பா குளத்தின் விவரங்களை பொதுப்பணித்துறையிடம் இருந்து பெற்ற கனிமொழி எம்.பி. குளத்தை தூர்வாருவதற்கான முன்னெடுப்புகளை தொடங்கினார். இந்நிலில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளில் நீராதாரங்களை பெருக்கும் தன்னார்வ அமைப்பு ஒன்று ஆத்தூர் கஸ்பா குளத்தை தூர்வாரிக் கொடுக்க முன் வந்ததுடன் இது தொடர்பான வழிகாட்டுதல்களை தருமாறு அந்த தன்னார்வ அமைப்பு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தது. இறுதியாக இப்போது ஒப்புதல் பெற்றுவிட்டதால் ஆத்தூர் கஸ்பா கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. கனிமொழி எம்.பி. அந்தக் கிராமத்திற்கு நேரில் சென்று தன்னிடம் மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.
கிராம மக்கள்
இதனிடையே குளம் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைக்கச் சென்ற கனிமொழியை சூழந்த கிராமமக்கள், தாங்கள் எப்போதோ வைத்த கோரிக்கையை நினைவில் வைத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு செய்து கொடுத்ததற்காக நன்றி தெதிவித்தார்கள். மேலும், இந்தக் குளம் தூர்வாரப்படுவதன் மூலம் 2,000 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் என்றும் 16 கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் நீங்கும் எனவும் ஆத்தூர் கஸ்பா கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
உலகச் சுற்றுச்சூழல் தினம்
ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என வெறுமனே சமூக வலைதளங்களில் பதிவை மட்டும் வெளியிடாமல் தனது செயல்பாடுகள் மூலம் சுற்றுச்சூழல் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார் கனிமொழி எம்.பி. கொரோனா தடுப்பு பணிகளுக்கு அடுத்தப்படியாக ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் நீராதாரங்களை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.