மாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் குறிக்கோள்... கனிமொழி எம்.பி.குற்றச்சாட்டு
தூத்துக்குடி: மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோள் என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல் எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த நாள் முதல் ஒட்டுமொத்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி நினைப்பதாகவும், அதற்கு எடுத்துக்காட்டே காஷ்மீர், முத்தலாக் உள்ளிட்ட விவகாரங்கள் எனவும் கனிமொழி கூறியுள்ளார்.
மேலும், இந்தியா என்பது பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு என்றும், அதனை ஒற்றை அடையாளத்திற்குள் சுருக்கி விட வேண்டும் என மோடி அரசு நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக தூத்துக்குடி விமானநிலையம் வந்த கனிமொழியை மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதா ஜீவன் வரவேற்று அழைத்துச்சென்றார். இதனிடையே திமுக மூத்த நிர்வாகி பரமால் பாண்டியன் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவரது சிகிச்சைக்கு தேவையான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
கனிமொழியின் நம்பிக்கை வார்த்தைகள் திமுக நிர்வாகி பரமால் பாண்டியன் குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications