கனிமொழி- தூத்துக்குடி திமுக வேட்பாளர்: முதன்முறையாக நேரடி தேர்தலில் களமிறங்கும் கருணாநிதி மகள்!
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகளான கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்குகிறார்.
சென்னையைச் சேர்ந்தவர் கனிமொழி (51). எம்.ஏ. படித்துள்ள இவர், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் ஆவார். இவருக்கு அரவிந்தன் என்ற கணவரும், ஒரு மகனும் உள்ளனர்.

எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என பன்முகத் திறமைகளைப் பெற்ற இவர், தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். முதன்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
தற்போது திமுக மகளிரணித் தலைவராக உள்ள கனிமொழி, அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஊடகத்துறையில் பணியாற்றியவர். திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராகவும், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.
ஸ்டெர்லைட் பிரச்சினையால் பெரும் கலவர பூமியாக மாறிய தூத்துக்குடியில் இம்முறை திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்படி இத்தொகுதியில் அதிமுக மற்றும் திமுக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications