திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியலில் கிடந்த ரூ.12 கோடி கேரள லாட்டரி.. ஒரே எண்ணில் மிஸ் ஆன பரிசு
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது ரூ.12 கோடியை முதல் பரிசாக கொண்ட கேரள விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் கிடந்தது. இந்த டிக்கெட்டை கைப்பற்றி கூகுளில் பரிசுத்தொகை முடிவை அதிகாரிகள் தேடி பார்த்தனர். ஆனால், இந்த டிக்கெட்டிற்கு பரிசுத்தொகை எதுவும் அடிக்கவில்லை என்பதுதெரியவந்துள்ளது.
கேரளாவில் கடந்த மாதம் 28 ஆம் தேதி விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. மொத்தம் அச்சிடப்பட்ட 45 லட்சம் டிக்கெட்டுகளில் பெரும்பாலானவை விற்று தீர்ந்துவிட்டன.

கோவில் உண்டியலில் லாட்டரி டிக்கெட்
ரூ.300 மதிப்பு கொண்ட இந்த டிக்கெட்டை கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கினர். VD 204266 என்ற எண்ணிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி அடித்தது. பாலக்காடு அல்லது கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. டிக்கெட் வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது தற்பொது வரை தெரியவரவில்லை. இதனால் முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என்று கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
பலரும் பரிசு விழுந்து இருக்கும் டிக்கெட் நம்மிடம் இருக்குமோ என ஒருமுறைக்கு இருமுறை செக் செய்து கொண்டு இருக்கிறார்களாம்.. இதற்கிடையே கேரள லாட்டரி டிக்கெட் திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியலில் கிடந்துள்ளது. ரூ.12 கோடி பரிசுத்தொகை கொண்ட அந்த டிக்கெட் உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும் போது கிடந்துள்ளது.
ஒரே ஒரு எண்ணில் மிஸ் ஆன பரிசு
இதை உடனடியாக எடுத்த கோவில் அதிகாரிகள் கூகுளில் பரிசு எண்னை சோதித்து பார்த்தனர். எனினும், இந்த டிக்கெட்டிற்கு எந்த ஒரு பரிசும் விழவில்லை. ஒரே ஒரு எண்ணில் பரிசுத் தொகை மிஸ் ஆனது தெரியவந்தது. அதாவது கடைசி 4 எண்களுக்கும் பரிசு வழங்கப்படும். அதன்படி திருச்செந்தூர் முருகன் கோவிலில் கிடந்த லாட்டரி சீட்டில் ஒரே ஒரு எண்ணில் ரூ.500 பரிசு மிஸ் ஆகியுள்ளது.
7548 என்ற எண்ணில், 7540 என்ற எண்ணுக்கு ரூ.500 பரிசு விழுந்துள்ளது. கடைசியில் 8 என்ற எண்ணுக்கு பதிலாக ஜீரோ இருந்திருந்தால் ரூ.500 பரிசு அடித்து இருக்கும். தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த லாட்டரி டிக்கெட் கோவில் உண்டியலில் யாரோ ஒரு பக்தர் போட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. குலுக்கல் முடிந்த பிறகு பரிசுத்தொகை விழாத விரக்தியில் இந்த டிக்கெட்டை யாராவது போட்டு சென்று இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்
எனினும், தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவில் உண்டியலில் கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகன் கோவிலுக்கு வந்த கேரள பக்தர் யாராவது ஒருவர் போட்டு சென்று இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியலில் கேரள லட்டரி டிக்கெட்டுகள் கிடந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். கடவுளாக இருந்தாலும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் பரிசு அடிக்கும் போல என நெட்டிசன்கள் சிலர் காமெடியாக பதிவிட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக கள்ளச்சந்தையில் லாட்டரி டிக்கெட்டுகள் புழங்குகின்றன.
சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
கேரளாவில் இருந்து வாங்கி வந்து தமிழகத்திற்குள் அசாம், கேரளா மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். போலீசார் ஒரு சில இடங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்பவர்களை கைது செய்தாலும் கூட கள்ளச்சந்தையில் டிக்கெட் புழக்கம் அதிகமாகவே உள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்த போலீசார் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications