எடப்பாடி படத்தை எரித்த பாஜக! போராட்டத்தில் குதித்த அதிமுக! அடுத்த லெவலுக்கு செல்லும் மோதல்?
எடப்பாடி படம் எரிக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி: எடப்பாடி படத்தை பாஜக இளைஞரணியைச் சேர்ந்த சிலர் எரித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்தச் சூழலில் அதைக் கண்டித்து அதிமுகவினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை அதிமுகவும் பாஜகவும் ஒரே அணியில் இருந்து தான் சந்தித்தது. இருப்பினும், இரு கட்சிக்கும் இடையே சமீப காலமாகப் பூசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
குறிப்பாக ஈரோடு தேர்தல் களத்தில் இரு தலைவர்களும் ஒன்றாகப் பிரசாரம் செய்யவில்லை. அதேபோல அண்ணாமலை மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு எடப்பாடி எந்தவொரு கண்டமும் தெரிவிக்கவில்லை.

பாஜகவில் ஐக்கியம்
இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் என்று சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் அங்குக் கடந்த சில நாட்களாக அங்குச் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வரிசையாக விலகி அதிமுகவில் இணைந்தனர். முதலில் பாஜக ஐடி விங் மாநில தலைவர் நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். அவர் பாஜகவில் இருந்து விலகும் போது, அண்ணாமலை மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை சுமத்திருந்தார். அவரை தொடர்ந்து மேலும் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியமாகினர்.

அமர் பிரசாத் ரெட்டி
வரும் நாட்களில் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது பாஜகவுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து, இரு தரப்பும் பரபர கருத்துகளைக் கூறி வருகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சிக்கும் வகையில் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி ட்வீட் செய்திருந்தார். "கூட்டணிக் கட்சியான அதிமுக இம்மாதிரியான செயலை செய்திருக்கக் கூடாது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளைக் காலில் போட்டு மிதித்து முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழியப் பேசலாமா?

கடும் தாக்கு
இனி அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை. நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கட்சி மாறிய கொள்கையற்ற பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா? கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாகக் கருதிய அதிமுகவினருக்குக் கொங்கு மண்டல வாக்காளர்கள் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளனர்.

அதிமுக பதிலடி
66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றது மீண்டு எழுவதற்கான அறிகுறி இல்லை. கோட்டையைப் பிடிப்பதற்கான கனவை மறந்து விடுங்கள். அண்ணாமலை தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் பாஜக தான் தமிழகத்தின் எதிர்காலம்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு அதிமுக ஐடி விங்கின் சிங்கை ராமச்சந்திரன் பதிலடி கொடுத்திருந்தார். அதாவது நோட்டாவை விடக் குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி எம்.எல்.ஏ.க்களை வென்றது என்பதே இதற்கான பதில் என்று கூறியிருந்தார்.

எடப்பாடி படம் எரிப்பு
இது கூட்டணிக்கு இடையே சலசலப்பை உண்டாக்கியது. இந்தச் சூழலில் கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி உறுப்பினர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர். அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டிய அவர்கள், எடப்பாடி ஒரு துரோகி என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.. பாஜகவின் மாநில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததைக் கண்டித்து, எடப்பாடியின் படம் எரிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதிமுக பதிலுக்குப் போராட்டம்
இதனிடையே எடப்பாடி பழனிசாமி படம் எரிக்கப்பட்டதைக் கண்டித்து போட்டியாக அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் திரண்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். கோவில்பட்டியில் டிஎஸ்பி அலுவலகம் முன்பு திரண்ட அதிமுகவினர், எடப்பாடி படம் எரிக்கப்பட்டதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications