7 நாட்களாக நெல்லை,தூத்துக்குடியை விட்டு நகராத அமைச்சர் எ.வ.வேலு! சாலை சீரமைப்புப் பணியில் 2000 பேர்!
தூத்துக்குடி: கடந்த 7 நாட்களாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் முகாமிட்டுள்ள அமைச்சர் எ.வ.வேலு, இரவு பகல் பார்க்காமல் 2,000 பணியாளர்கள் மூலம் சாலை சீரமைப்புப் பணிகளை கவனித்து வருகிறார்.
அமைச்சர் எ.வ.வேலுவுடன் நிவாரணப் பணிகளுக்காக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு சென்ற எல்லா அமைச்சர்களும் இப்போது ஊர் திரும்பிவிட்டனர். அமைச்சர் மூர்த்தி மட்டும் மதுரையிலிருந்து வந்து செல்கிறார். ஆனால் எ.வ.வேலு முதல்வர் அறிவுறுத்தல்படி அங்கேயே முழுமையாக முகாமிட்டு சாலைகளையும், பாலங்களையும் சீரமைத்து வருகிறார்.

இந்த பேரிடர் மீட்புப் பணிகளில், தலைமைப் பொறியாளர்கள் 5பேர், கண்காணிப்புப் பொறியாளர்கள் 6பேர், கோட்டப் பொறியாளர்கள் 10 பேர், உதவிக் கோட்டப் பொறியாளர்கள் 30பேர், உதவிப் பொறியாளர்கள் 5பேர், சாலை ஆய்வாளர்கள் 75பேர், பல்வேறு கோட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சாலைப் பணியாளர்கள் 1150பேர் மற்றும் அன்றாட பணிகளுக்காக பணியாளர்கள் 2000 பேர் என அனைவரை கொண்டும் சாலை சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
அதேபோல், 106 ஜே.சி.பி. இயந்திரங்கள், 20 ஹிட்டாச்சி இயந்திரங்கள், 223 லாரிகள் என இயந்திரங்களைப் பயன்படுத்தியும், சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் பணிகள் விரைவாக செய்து முடிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மின்சார சீரமைப்பு பணிகளில், வீட்டு மின்சார இணைப்புகள், வியாபாரத்திற்கு வழங்கப்படும் மின்சார இணைப்புகள் மற்றும் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சார இணைப்புகள் என மூன்று வகைகள் உள்ளதால் முதலில் வீட்டு மின்சார இணைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மின் தடை சரிசெய்யப்பட்டு வருகின்றன
வீட்டு மின்சார இணைப்பும், வியாபாரத்திற்கு வழங்கப்படும் மின்சார இணைப்புகளும் 95% சதவீதப் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் மீதமுள்ள 5% சதவீதப் பணிகள் இன்று மாலையோ அல்லது நாளையோ முடிவடையும் என்றும் அமைச்சர் எ.வ.வேலுவே இன்று பேட்டியளித்துள்ளார். இப்பணிகள் முடிவடைந்தவுடன், விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சார இணைப்புப் பணிகள், மின்சார வாரிய பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications