ஜெயலலிதா இயற்கையாக மரணமடைந்தார்.. சசிகலா மீது சந்தேகமே இல்லை.. அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரே போடு
கோவில்பட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டதன் காரணமாக இயற்கையாக மரணம் அடைந்தார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு 75 நாட்களுக்கு பிறகு 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார் ஜெயலலிதா.
அவர் மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தான் ஜெயலலிதா அருகே சென்று பார்க்க முடிந்தது. வேறு யாருக்கும் அனுமதி தரப்படவில்லை.
ஜெயலலிதா மரணம்
இந்த நிலையில்தான் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க இப்போது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கடம்பூர் ராஜு பேச்சு
கடம்பூர் ராஜு கூறுகையில், ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் சந்தேகப்படவில்லை. ஜெயலலிதா உடல்நிலை குறைவு ஏற்பட்டு இயற்கையாகவே உயிரிழந்தார். விமர்சனங்கள் வந்ததால் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதால் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா உடனிருந்து கவனித்துக் கொண்டார். இயற்கையை யாராலும் வெல்ல முடியாது என்பதால் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார். இவ்வாறு கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு பலம்
சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு பலம் அதிகரிக்கும் என்று ஒருபக்கம் நகர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில்தான் சசிகலா மீது சந்தேகம் இல்லை என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கோவில்பட்டி தொகுதி
கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் கடம்பூர் ராஜூ மீண்டும் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் களமிறங்கியுள்ளார். இந்தநிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக கடம்பூர் ராஜு பேசியுள்ளது அவர்கள் தொகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.