ரெய்டு : “ஏங்க.. என்ட்ட இத மட்டும் கேளுங்க”.. அமைச்சர் நேரு, கனிமொழி ரியாக்ஷன கவனிச்சீங்களா? ஆஹா!
தூத்துக்குடி : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான பலரது வீடுகள், அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபற்றிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் கொடுத்துள்ள ரியாக்ஷன் என்ன தெரியுமா?
கரூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, கரூர், திருப்பூர் ஆகிய ஊர்கள் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நிறுவனங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பல்லடுக்கு வாகன நிறுத்துமிடக் கட்டிடத்தை திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி இன்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் எம்.எல்.ஏக்கள், அரசு உயரதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் நேருவுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கனிமொழி எம்.பியும் பங்கேற்றார்.

அதைத் தொடர்ந்து, வெளியே வந்த அமைச்சர் நேருவிடம், செய்தியாளர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடைபெறுவது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "யூரின் போறது, வெளிய போறது.. தண்ணி குடிக்கிறது.. லைட் போடுறது.. குடிசை கட்டுறது.. அதைப் பற்றி மட்டும் என்கிட்ட கேளுங்க" எனக் கூறிவிட்டு வேகமாகச் சென்று காரில் ஏறினார்.
பின்னால் வந்த தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, "எனக்கு தெரியாது" என மறுத்தார் கனிமொழி. பின்னர், "அமைச்சருக்கு லேட் ஆகுதுங்க" எனக் கூறிவிட்டு அவரும் வேகமாகச் சென்று காரில் ஏறினார்.












Click it and Unblock the Notifications