தமிழகத்திலேயே முதல்முறையாக.. தூத்துக்குடியில் நடமாடும் தடுப்பூசி மையம்.. கனிமொழியின் புது முயற்சி..!
தூத்துக்குடி: தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடமாடும் தடுப்பூசி மையத்தை தொடங்கிவைத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.
மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர் முன்னெடுத்து வருகிறார்.
கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக தூத்துக்குடியில் முகாமிட்டு கொரோனா தடுப்பு பணிகளையும் அவர் முடுக்கி விட்டு வருகிறார்.
இப்போது கொரோனா தடுப்பு பணிகள்... அடுத்து நிச்சயம் நீட் ரத்து நடவடிக்கை தான்.. கனிமொழி எம்பி உறுதி
விழிப்புணர்வு
கொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து, பொதுமக்களை தானே நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியத்தையும், பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த அச்சத்தையும் போக்கி வருகிறார் திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி. அவ்வாறு அவர் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது தூய்மை பணியாளர் ஒருவர் தடுப்பூசி செலுத்தி எங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் எங்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவது என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த கனிமொழி எம்பி, "நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உங்கள் குடும்பத்தை நீங்கள் காப்பாற்றலாம் என்று கூறி அவருக்கு நம்பிக்கையூட்டினார்.
நேரில் சென்று
தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில், நடமாடும் தடுப்பூசி மையம் அமைத்து நகரம் முதல் கிராமங்கள் வரை அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறார். கடந்த வாரம் நடமாடும் தடுப்பூசி மையத்தை துவக்கி வைத்த கனிமொழி எம்.பி, தடுப்பூசி திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் நேரில் சென்று ஊராட்சி தலைவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார்.
நடமாடும் தடுப்பூசி மையம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் மொத்தம் 403 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதில் 1745 குக்கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 நடமாடும் தடுப்பூசி குழு என மொத்தம் 36 நடமாடும் தடுப்பூசி குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் அடங்கிய நடமாடும் தடுப்பூசி குழு காலை 9 மணி முதல் 12 மணி வரை ஒரு கிராமத்திலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு கிராமத்திலும் என இரண்டு வேலையாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. தடுப்பூசி குழு வருகை தொடர்பாக முதல் நாளே அங்குள்ள பொதுமக்கள் அனைவருக்கும் ஆட்டோ விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது மேலும் அந்தப் பகுதி ஊராட்சி தலைவர்களும் அலுவலர்களும் பொதுமக்களுக்கு நேரில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர் ஆரம்பத்தில் 21 நாட்களுக்குள் இந்த நடமாடும் தடுப்பூசி மையத்தை முடிக்க திட்டமிட்ட நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்பதால் தற்போது நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய முயற்சி
கனிமொழி எம்.பி.யின் இந்த முயற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நடமாடும் தடுப்பூசி மையம் அமைத்து, அனைத்து குக்கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.