"ஊழல் செய்தவர்" செந்தில் பாலாஜியை பாஜகவில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை..நாராயணன் திருப்பதி காட்டம்
தூத்துக்குடி: கண்டக்டர் வேலை, கிளீனர் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி சாதாரண மக்களிடம் ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி.. அவரை பாஜகவில் சேர்க்க வேண்டிய தேவை இல்லை என்று பாஜகவின் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
"நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டது என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் வைத்த வாதம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, சாதாரண மக்களிடம் ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி.. அவரை பாஜகவில் சேர்க்க வேண்டிய தேவை இல்லை என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடியியில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணன் திருப்பதி கூறியதாவது:- "ஒரே நாடு ஒரே தேர்தல் 2024 ஆம் ஆண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. பல மாநிலங்களில் 3 மாதத்திற்கு வருவதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகிறது. ராணுவம் உள்ளிட்ட பலரின் பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே 2029 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
பாஜகவில் செந்தில் பாலாஜி போன்றவர்களை சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. கண்டக்டர் வேலை, கிளீனர் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி சாதாரண மக்களிடம் செந்தில் பாலாஜி ஊழல் செய்தவர். செந்தில் பாலாஜி மின்சாரம் தயாரிக்க விண்ணப்பம் கொடுக்க வந்த ஒருவரிடம் 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றவர். அவரை பாஜகவிற்கு வாங்க என அழைப்பது நம்பும் படியாகவா இருக்கிறது" என்றார்.
முன்னதாக, நேற்று முன் தினம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது, "செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது.
சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் வருமான வரியை தாக்கல் செய்துள்ளார். சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்? வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது" என்று வாதத்தை முன்வைத்தார்.












Click it and Unblock the Notifications