தூத்துக்குடி தூய பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம் - ஆகஸ்ட் 5ல் சப்பர பவனி
தூத்துக்குடி: தூய பனிமய மாதா பேராலயத்திருவிழா தூத்துக்குடியில் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 5 ம் தேதி பனிமய மாதா சப்பரபவனி நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், இலங்கை, சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். தற்போது 437வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சனிக்கிழமை காலை அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 7.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் நடந்தது.
தொடர்ந்து ஆலயம் எதிரே அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடிக் கம்பத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. கொடியை கத்தோலிக்க தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அர்ச்சித்து ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா முன்னிலை வகித்தார். கொடியேற்றத்தின்போது உலக சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
தொடர்ந்து மதியம் 12 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திவ்ய சந்தமரிய தஸ்மேரிஸ் மாதாவிற்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டது. கொடிக்கம்பம் முன் பால், பழம், பேரீச்சம்பழம் நேர்ச்சை பொருட்களாக படைக்கப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் வெளிநாட்டு, வெளிமாநில இறைமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி பனிமய மாதா சப்பரபவனி திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொடியேற்றம் மற்றும் திருவிழாவினை முன்னிட்டு ஆலயம் மற்றும் வளாகப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications