தூத்துக்குடி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு.. ஒன்று கூடி ஊர் மக்கள் செய்த சம்பவம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட விஸ்வநாத தாஸ் நகர் பகுதியில் அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வீடு ஆக்கிரமித்து கட்டப்படுவதன் காரணமாக பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமான பொதுமக்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கக்கூடாது. அப்படி மீறி ஆக்கிரமித்தால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை பாயும். ஆனால் அந்த காலத்தில் ஆக்கிரமித்தவர்கள் பலர் பட்டா வாங்கிவிட்டார்கள். பலர் பத்திரப்பதிவு மட்டும் செய்து வீடுகளை கட்டி வசித்து வருகிறார்கள். நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு மட்டும் அரசு பட்டா தருகிறது.

மற்ற அரசு நிலங்களுக்கு அரசு பட்டா வழங்குவது இல்லை. இப்போது உள்ள சூழலில் எந்த அரசு நிலத்தையும் ஆக்கிரமிக்க முடியாது. அப்படி ஆக்கிரமித்தாலும் பத்திரப்பதிவு செய்ய முடியாது. பத்திரப்பதிவு செய்து பல வருடம் ஆனவர்களாக இருந்தால் பட்டா வாங்கிவிட முடியாது. இது தான் எதார்த்தம். அதேநேரம் சிலர் பட்டா நிலத்துடன் சேர்த்து, அரசு நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமித்து வீடு கட்டுவார்கள். அதற்கு பட்டாவும் வாங்கும் சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவில்பட்டியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதி விஸ்வநாத தாஸ் நகர். இந்த நகரில் எதிர்கால பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது.அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி வருவதால் அதற்கு அடுத்துள்ள பகுதி மக்கள் வர முடியாத சூழ்நிலை ஏற்படும், இதனால் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். இருந்த போதிலும் அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மீண்டும் கட்டிடப் பணிகள் தொடங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி - கடலையூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டிடப் பணிகளை நிறுத்த வேண்டும், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பணிகள் நிறுத்தப்படும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக கோவில்பட்டியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications